search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதிய கட்சி பெயர் பதிவு: சசிகலாவை ஓரங்கட்டவில்லை - டிடிவி தினகரன்
    X

    புதிய கட்சி பெயர் பதிவு: சசிகலாவை ஓரங்கட்டவில்லை - டிடிவி தினகரன்

    சசிகலாவின் ஒப்புதலோடு தான் புதிய கட்சி பதிவு செய்யப்பட்டதாகவும் அவரை ஓரங்கட்டவில்லை எனவும் டிடிவி தினகரன் கூறியுள்ளார். #TTVDinakaran

    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சிறையில் சசிகலாவை சந்தித்த பின் பெங்களூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு சசிகலா எனக்கு வாழ்த்து சொன்னார். நன்றாக செயல்பட சொன்னார். ஊடகங்களில் பல வி‌ஷயங்களை கிளப்பி விடுவதை போன்று ஒன்றும் இல்லை என்று உங்களிடம் (செய்தியாளர்களிடம்) தெரியப்படுத்த சொன்னார்.

    ஏற்கனவே தேர்தல் பிரசாரத்தில் நான் இருந்ததால் இங்கு வந்து சசிகலாவை சந்திக்க முடியாத காரணத்தினால் கட்சி, சின்னம் தொடர்பாக ஏற்கனவே எங்களது வழக்கறிஞர் சசிகலாவிடம் கலந்து பேசினார். சசிகலாவின் ஒப்புதலோடு தான் அனைத்தும் நடைபெற்று வருகிறது.

    சசிகலா பேச முடியாத நிலைமையில் இருப்பதை பயன்படுத்திக் கொண்டு சில வி‌ஷமிகள் புகழேந்தியை வைத்து சில டாட்காமில் தவறான தகவல்களை கொடுத்திருக்கிறார்கள். அதெல்லாம் உண்மை இல்லை.

    சாதிக்அலி தீர்ப்புபடி எண்ணிக்கை அடிப்படையில் இரட்டை இலை சின்னத்தை பழனிசாமி-பன்னீர்செல்வம் கம்பெனிக்கு தேர்தல் ஆணையம் வழங்கியது. ஆனால் அதனை ஏற்காத ஆர்.கே.நகர் மக்கள் பழனிசாமி-பன்னீர்செல்வம் கம்பெனிக்கு தோல்வியை தந்தார்கள். அதேபால் தற்போது மக்கள் தீர்ப்பு வந்தவுடன் மீதமிருக்கிற உண்மையான தொண்டர்களும் எங்கள் பக்கம் வந்து விடுவார்கள்.

    மக்களே இறுதி எஜமானர்கள். ஜனநாயக முறைப்படி போராடுவோம். அதே நேரத்தில் சசிகலா இரட்டை இலை தொடர்பாக சீராய்வு மனுவை சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல் செய்து சட்டப்படி போராடுவார். இரட்டை இலை சின்னம் தொடர்பாக தான் சுப்ரீம்கோர்ட்டில் சீராய்வு மனுதாக்கல் செய்யப்படும். அதே நேரத்தில் கட்சி தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் இருக்கிறது. அதனையும் அவர் நடத்துவார்.

    ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். கம்பெனியால் அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டார். அது தொடர்பான வழக்கையும் அவர் தொடர்ந்து நடத்துவார். எங்கள் கட்சியில் சசிகலாவுக்காக தலைவர் பதவியை காலியாக வைத்துள்ளோம். துணைத் தலைவரும் தற்போது வந்திருக்கிறார்.

    எங்கள் கட்சியில் தலைவர், பொதுச்செயலாளர், துணைத்தலைவர் ஆகிய பதவிகள் தேர்ந்தெடுக்கப்படக் கூடிய பதவிகள். பொதுச்செயலாளர், துணைத்தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. தலைவர் பதவியை சசிகலாவுக்காக காலியாக வைத்திருக்கிறோம். அவர் வெளியில் வந்தபிறகு அது தொடர்பாக முடிவு செய்வார்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா ஏற்கனவே இருக்கிறார். அதனால் சசிகலாவை ஓரங்கட்டுவது, ஒதுக்குவது என்று சொல்வது மிகவும் தவறானது. அதேபோல் தொலைக்காட்சிகளின் விவாதங்களில் இரட்டை இலை சின்னத்தை மீட்போம் என்று கூறி அ.தி.மு.க. தொண்டர்களை அழைத்து வந்து தினகரன் ஏமாற்றிவிட்டார் என்று சொல்வதும் தவறானது. ஏனெனில் எதனால் இதுபோன்று நடைபெறுகிறது என்பது எங்கள் தொண்டர்களுக்கு நன்றாக தெரியும்.

    சுப்ரீம்கோர்ட்டில் எங்கள் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்ட பிறகு சீராய்வு மனுதாக்கல் செய்து நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தொடங்கும் பணியில் நாங்கள் இறங்கி விட்டோம். சசிகலா சீராய்வு பணியை மேற்கொள்வார். அதுபோல அ.தி.மு.க. கட்சி தொடர்பான வழக்குகளையும் தொடர்ந்து நடத்துவார். சசிகலா நன்றாக இருக்கிறார்.

    பொன்பரப்பி போன்ற இடங்களில் மறுவாக்குப் பதிவு நடத்த வேண்டும். சமுதாய அடிப்படையிலான சண்டைகள் இல்லாமல் இருப்பதுதான் நாட்டிற்கு நல்லது. அதனால்தான் சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு அரசியல் இயக்கங்கள் இருக்க வேண்டும் என்று திரும்ப திரும்ப கூறிக் கொண்டிருக்கிறேன்.

    நடந்து முடிந்த தேர்தலில் பரிசுப் பெட்டகம் மாபெரும் வெற்றி பெறும். அதே போல் மே 19-ந்தேதி நடைபெறவிருக்கும் 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் நாங்கள் வெற்றி பெறுவோம். மே 1-ந்தேதியிலிருந்து 15-ந் தேதி வரை பிரசாரம் மேற் கொள்கிறேன்.

    இவ்வாறுஅவர் கூறினார். #TTVDinakaran

    Next Story
    ×