search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலம் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் 2 இடங்களில் பெண்கள் சாலை மறியல்
    X

    சேலம் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் 2 இடங்களில் பெண்கள் சாலை மறியல்

    சேலம் அருகே இன்று காலை குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் 2 இடங்களில் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் வீராணம் அருகே உள்ளது பருத்திக்காடு கிராமம். இந்த கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.

    இந்த கிராமத்திற்கு கடந்த சில மாதங்களாக 10 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த கிராம மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உள்பட பலரிடம் புகார் கொடுத்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் இன்று காலை ஒன்று திரண்டனர். பின்னர் சேலம்-அரூர் சாலையில் பருத்திக்காடு பிரிவு ரோடு மற்றும் வைதாதனூர் பிரிவு ரோடு ஆகிய 2 இடங்களில் 50 பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் சேலம்-அரூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருபுறமும் நீண்ட தூரம் வாகனங்கள் அணி வகுத்து நின்றன. தகவல் அறிந்த வீராணம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது ஆவேசம் அடைந்த மக்கள் குடிநீர் இல்லாமல் கடும் அவதிப்படுவதாகவும், இது குறித்து அதிகாரிகளிடம் பல முறை மனு கொடுத்தும் கண்டு கொள்ளவில்லை என்றும் புகார் கூறினர். மேலும் வட்டார வளர்ச்சி அதிகாரி சம்பவ இடத்திற்கு வந்து தண்ணீர் முறையாக வழங்கப்படும் என்று உறுதி அளித்தால் தான் போராட்டத்தை கைவிடுவோம் என்றும் ஆவேசமாக கூறினர்.

    அப்போது போலீசாருக்கும், மறியலில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசார் தொடர்ந்து அவர்களை சமாதானப்படுத்தியதை அடுத்து 7 மணிக்கு தொடங்கிய மறியல் போராட்டடம் 7.40 மணிக்கு கைவிடப்பட்டது. ஆனாலும் கலைந்து செல்லாத மக்கள் வட்டார வளர்ச்சி அதிகாரி வருகைக்காக சாலையோரம் காத்து நின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

    Next Story
    ×