search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    8 வழிச்சாலை நிறைவேறும் என்று மத்திய மந்திரி பேசிய போது முதல்வர் மவுனமாக இருந்தது ஏன்? தினகரன் கேள்வி
    X

    8 வழிச்சாலை நிறைவேறும் என்று மத்திய மந்திரி பேசிய போது முதல்வர் மவுனமாக இருந்தது ஏன்? தினகரன் கேள்வி

    8 வழிச்சாலை நிறைவேற்றப்படும் என்று மத்திய மந்திரி நிதின்கட்காரி பேசியபோது எடப்பாடி பழனிசாமி மவுனமாக இருந்தது ஏன்? என்று தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். #dinakaran #edappadipalanisamy #nitingadkari

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை, தண்டராம்பட்டு, ஆரணியில் தினகரன் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    திருவண்ணாமலை என்பது ஒரு அக்னி ஸ்தலம். தீயவர்களையும், துரோகம் செய்பவர்களையும் அழித்துவிடும் அக்னியாக உள்ள இந்த தொகுதி மக்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்பவர்களை அக்னியாக இருந்து அழிக்க வேண்டும். அ.தி.மு.க. மெகா கூட்டணி சார்பில் இந்த தொகுதியில் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை வேட்பாளராக நிறுத்தியுள்ளனர்.

    மதச்சார்பற்ற கூட்டணி என்று தி.மு.க. சார்பில் கூறுகிறார்கள். கடந்த 15 ஆண்டு காலமாக காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. ஆட்சியில் மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்து மக்களை புறம்தள்ளி தனது குடும்பத்தார் மற்றும் உறவினர்களையே பாதுகாத்தவர்கள் இவர்கள். இவர்களின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி கர்நாடகாவில் ஆட்சிக்கு வந்தால் காவிரி மேலாண்மை வாரியத்தை கலைத்து விடுவேன் என தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது.

    8 வழி சாலை திட்டம் தற்போது நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது. மத்திய மந்திரி நிதின்கட்காரி சேலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் முதல் -அமைச்சர் முன்னிலையிலேயே விவசாயிகள் ஆலோசனை பெற்று மீண்டும் 8 வழி சாலை திட்டத்தை நிறைவேற்றுவேன் என கூறும் போது முதல் - அமைச்சர் வாய்மூடி கொண்டு அமர்ந்துள்ளார். இந்த 8 வழி சாலையானது 5 மாவட்ட விவசாயிகள் மற்றும் நீர் ஆதாரங்களை அழித்து தனியார் நிறுவனத்திற்காக அமைக்கப்படும் சாலை. மத்திய மந்திரி தேர்தல் நேரத்தில் எவ்வளவு தைரியமாக 8 வழி சாலையை அமைத்தே தீருவேன் என கூறுகிறார். இதனால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    இந்த பகுதி மக்கள் அ.தி.மு.க.விற்கு வாக்களித்தால் இந்த பகுதி விவசாயத்தையும், பசுமையையும் அழித்து விடுவார்கள். இந்த 8 வழி சாலை வருவதால் தொழில் வளர்ச்சி பெறும் என சட்டமன்றத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். 8 வழி சாலை திட்டத்தை வரவேற்பதன் மூலம் தி.மு.க., பா.ஜ.க. உடன் மறைமுக கூட்டணி வைத்துள்ளது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. 8 வழி சாலையை எதிர்த்து அ.ம.மு.க. பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தி உள்ளது. நீதிமன்றமே தடைவிதித்த அந்த 8 வழி சாலை திட்டத்தை நிறைவேற்றுவேன் என மத்திய மந்திரி கூறுவது தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்வது போன்றது.

    ஏற்கனவே ஆர்.கே. நகரில் ஓட்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் கொடுத்து அ.தி.மு.க.வால் ஆட்சிக்கு வர முடியவில்லை. ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்களான நமக்குத்தான் அந்த மக்கள் வெற்றியை தந்தார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார். #dinakaran #edappadipalanisamy #nitingadkari 

    Next Story
    ×