search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாகையில் இன்று பா.ஜனதா நிர்வாகி வெட்டிக்கொலை
    X

    நாகையில் இன்று பா.ஜனதா நிர்வாகி வெட்டிக்கொலை

    நாகை அருகே பா.ஜனதா நிர்வாகியை வெட்டிக் கொலை செய்து ஏரியில் உடலை வீசி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை அருகே பா.ஜனதா நிர்வாகியை வெட்டிக் கொலை செய்து ஏரியில் உடலை வீசி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த திருப்பூண்டி அருகே கீழையூர் காவல் சரகம் காமேஸ்வரம் கீரன் ஏரி உள்ளது. இன்று காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் ஏரியில் ஒருவர் பிணமாக மிதப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அவர்கள் கீழையூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதன்பேரில் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் அப்பகுதி மக்களின் உதவியுடன் ஏரியில் இருந்து பிணத்தை மீட்டு கரைக்கு கொண்டு வந்து பார்த்த போது அவரின் உடலில் அரிவாளால் வெட்டப்பட்ட வெட்டுக் காயங்கள் இருந்தது. இதனால் அவர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் பிரேத பரிசோதனைக்காக உடலை நாகை அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் அவர் யார்? என போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, அவர் வேளாங்கண்ணி அருகே திருப்பூண்டி பகுதி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பழனி துரை மகன் செந்தில் குமார்(வயது40) என்பது தெரியவந்தது. இவர் பா.ஜனதா கட்சியில் மாவட்ட அமைப்பு சாரா தொழிலாளர் சங்க தலைவராக இருந்து வந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமார் தேர்தல் முன்விரோதத்தில் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமாக என்றும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செந்தில்குமாரை மர்மமான முறையில் வெட்டிக் கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடிவருகின்றனர்.

    தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ளது. இந்த நிலையில் நாகையில் பா.ஜனதா நிர்வாகி மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கொலை செய்யப்பட்ட செந்தில்குமாருக்கு உமா ராணி என்ற மனைவியும், அனுஷ்யா(7) என்ற மகளும் உள்ளனர்.

    பா.ஜனதா பிரமுகர் கொலையுண்ட சம்பவத்தால் அப்பகுதியில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    Next Story
    ×