search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பணக்கார நண்பர்களின் பிரதமராக மோடி உள்ளார்- நடிகை குஷ்பு தாக்கு
    X

    பணக்கார நண்பர்களின் பிரதமராக மோடி உள்ளார்- நடிகை குஷ்பு தாக்கு

    பணக்கார நண்பர்களுக்கு மட்டும்தான் மோடி பிரதமராக உள்ளார் என்று குமரி மாவட்டத்தில் பிரசாரத்தில் ஈடுபட்ட நடிகை குஷ்பு தெரிவித்தார். #LokSabhaelections2019 #Kushboo
    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமாரை ஆதரித்து நேற்று குமரி மாவட்டத்தில் நடிகை குஷ்பு பிரசாரம் செய்தார். சுசீந்திரம், கொட்டாரம், நாகர்கோவில் ராமன் புதூர் உள்பட 15 இடங்களில் திறந்த ஜீப்பில் சென்று அவர் பேசினார்.

    பாராளுமன்ற தேர்தலின் வாக்குப்பதிவு நாளான வருகிற 18-ந்தேதி நீங்கள் ஓட்டுப்போடும் முன்பு கடந்த 5 ஆண்டு பாரதிய ஜனதா ஆட்சியில் எந்த அளவிற்கு கஷ்டப்பட்டு இருக்கிறோம் என்பதை நினைத்துப் பார்த்து வாக்களியுங்கள்.

    பிரதமர் மோடி உங்கள் வங்கிக் கணக்கில் 15 லட்சம் ரூபாய் போடுவதாக சொன்னாரே அதை அவர் செய்தாரா? 2 கோடி பேருக்கு வேலை கொடுப்பதாக சொன்னாரே வேலை கிடைத்ததா? பாரதிய ஜனதா ஆட்சியில் 2 கோடி பேர் வேலை இழந்து உள்ளனர்.

    பாரதிய ஜனதா தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இந்த ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. டெல்லியில் விவசாயிகள் 60 நாட்கள் போராடிய போதும் அவர்களை பிரதமர் பார்க்கவில்லை. பிரதமர் மோடி பணக்கார நண்பர்களுக்கு மட்டும்தான் பிரதமராக உள்ளார். இந்த ஆட்சியில் விலைவாசி எந்த அளவிற்கு உயர்ந்து இருக்கிறது என்பது உங்களுக்கு நன்றாக தெரியும்.

    காங்கிரஸ் ஆட்சியின் போது 450 ரூபாயாக இருந்த கியாஸ் விலை இன்று 950 ரூபாய் அளவிற்கு உயர்ந்து விட்டது. கேபிள் டி.வி. கட்டணம் 150 ரூபாயில் இருந்து 350 ரூபாய் ஆகி விட்டது. அதிக பணம் கொடுத்தால் தான் எல்லா சேனல்களையும் பார்க்க முடியும். நீங்கள் விரும்பும் சேனல்களைக்கூட உங்களால் பார்க்க முடியாது.

    பாரதிய ஜனதா ஆட்சியில் அவர்கள் சொல்வதைதான் நீங்கள் கேட்க வேண்டும். அவர்கள் சொல்வதைதான் நீங்கள் சாப்பிட வேண்டும். யாரை காதலிக்க வேண்டும், யாரை திருமணம் செய்ய வேண்டும் என்பதைக்கூட அவர்கள்தான் சொல்வார்கள். ஒரு சர்வாதிகார ஆட்சியை நாம் பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.


    இதற்கு எல்லாம் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்றால் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்தான் முடியும். இளம் தலைவர் ராகுல்காந்தி பிரதமர் ஆகும் போதுதான் எல்லா மாற்றத்தையும் கொண்டுவர முடியும். அடுத்த பிரதமர் ராகுல்காந்திதான் என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கூறி உள்ளார். அவரது கனவை நினைவாக்க வேண்டும்.

    ஆட்சிக்கு வந்தபிறகு காங்கிரஸ் கட்சி சொன்னதை எல்லாம் நிறைவேற்றும். நாங்கள் சொல்வதைதான் செய்வோம், செய்வதைத் தான் சொல்வோம். மக்களின் குரலுக்கு மோடி செவிசாய்க்கவில்லை. ஆனால் ராகுல் மக்களின் தேவை அறிந்து செயலாற்றுவார். ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.72 ஆயிரம் உங்கள் வீடு தேடி வரும்.

    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் ஊரக வேலை திட்டத்தில் ரூ.300 வழங்கப்படும். கல்விக்கடன், விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். சிறு தொழில் தொடங்க வங்கியில் எந்தவித பாரபட்சமும் இல்லாமல் கடன் வழங்கப்படும்.

    இவ்வாறு குஷ்பு பேசினார். #LokSabhaelections2019 #Kushboo
    Next Story
    ×