search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீராணம் ஏரி நிரம்பி கடல் போல் காட்சியளிப்பதை படத்தில் காணலாம்.
    X
    வீராணம் ஏரி நிரம்பி கடல் போல் காட்சியளிப்பதை படத்தில் காணலாம்.

    கோடைகாலத்தில் முதன்முறையாக வீராணம் ஏரி நிரம்பியது

    சென்னை குடிநீருக்காக மேட்டூர் அணையில் இருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதால் தற்போது ஏரி நிரம்பி காட்சி அளிக்கிறது. #VeeranamLake
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடியாகும்.

    இந்த ஏரி மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதுதவிர இந்த ஏரியில் இருந்து தினமும் சென்னை மக்களின் தேவைக்காக குடிநீர் அனுப்பி வைக்கப்படுகிறது.

    கடந்த ஜனவரி மாதம் 15-ந் தேதி நீர் வரத்து அதிகமாக இருந்ததால் வீராணம் ஏரி 47.50 அடியை எட்டியது.

    இங்கிருந்து பாசனத்துக்காக 34 மதகுகள் வழியாகவும், சென்னை குடிநீருக்காக ராட்சத குழாய் மூலமும் 74 கனஅடி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் கடந்த 2 மாதமாக வெயில் சுட்டெரித்து வருவதாலும், மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படாததாலும் வீராணம் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக குறையத்தொடங்கியது.

    கடந்த வாரம் ஏரியின் நீர்மட்டம் 43.20 அடியாக இருந்தது. நீர்மட்டம் 39 அடியாக குறைந்து விட்டால் வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நிறுத்தப்படும் சூழ்நிலை உருவாகியது.

    இதைத்தொடர்ந்து சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டுமானால் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து கடந்த மாதம் 31-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து 8 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் தஞ்சாவூர் மாவட்டம் கல்லணைக்கு வந்தது.

    பின்னர் கடந்த 4-ந் தேதி கீழணைக்கு தண்ணீர் வந்தது. அங்கிருந்து கடந்த 8-ந் தேதி 2 ஆயிரம் கனஅடி நீர் வீராணம் ஏரிக்கு திறந்து விடப்பட்டது. இதனால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் 46.40 அடியாக உயர்ந்தது. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 60 கனஅடி நீர் அனுப்பி வைக்கப்பட்டது.

    கீழணையில் இருந்து தொடர்ந்து 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் தொடர்ந்து வீராணம் ஏரிக்கு வந்து கொண்டிருந்தது.

    இதையடுத்து நேற்று இரவு வீராணம் ஏரி முழுக்கொள்ளவான 47.50 அடியை எட்டியது. இதனால் ஏரி தற்போது கடல்போல் காட்சி அளிக்கிறது. வீராணம் ஏரிக்கு கீழணையில் இருந்து இன்று 1,300 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. சென்னைக்கு 59 கனஅடி தண்ணீர் அனுப்பப்படுகிறது.

    சென்னையில் கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. சென்னையை சுற்றியுள்ள ஏரிகளில் தண்ணீர் இல்லை. வீராணம் ஏரியை நம்பியே சென்னை மக்கள் உள்ளனர்.

    வீராணம் ஏரி நிரம்பி உள்ளதால் சென்னைக்கு அனுப்பப்படும் குடிநீர் அளவு விரைவில் அதிகரிக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினார்கள். கோடைகாலத்தில் வீராணம் ஏரி வறண்டு காணப்படும். ஏரியில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடுவார்கள். இந்த நிலையில் சென்னை குடிநீருக்காக மேட்டூர் அணையில் இருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதால் தற்போது ஏரி நிரம்பி காட்சி அளிக்கிறது. இதைப்பார்த்த விவசாயிகள், பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    கோடைகாலத்தில் முதன்முறையாக வீராணம் ஏரி நிரம்பி உள்ளது என்று பொதுமக்கள் தெரிவித்தனர். #VeeranamLake


    Next Story
    ×