search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை: திருமாவளவன்-பாலகிருஷ்ணன் கண்டனம்
    X

    துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை: திருமாவளவன்-பாலகிருஷ்ணன் கண்டனம்

    திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். #Duraimurugan #DMK #Raid

    சென்னை:

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்:-

    வருமான வரித்துறை அதிகாரிகளும், தேர்தல் பறக்கும் படையினரும் காட்பாடியில் உள்ள தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் இல்லம் மற்றும் வேலூர் பாராளுமன்ற வேட்பாளர் கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரியிலும் சென்று வருமான வரித்துறை சோதனை என்ற பெயரில் அதிரடியாக அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர்.

    தேர்தல் காலத்தில் எதிர்க்கட்சி வேட்பாளர்களை அச்சுறுத்தும் வகையிலும் தேர்தல் நடவடிக்கையை முடக்கும் வகையிலும் இந்த சோதனை நடைபெற்றுள்ளது. வருமான வரித்துறையின் இத்தகைய நடவடிக்கைகளை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

    தமிழகத்தில் எதிர்க்கட்சி வேட்பாளர்களை அச்சுறுத்தும் வகையில் பா.ஜ.க. அரசு ஈடுபட்டு வருவது ஜனநாயக ரீதியான தேர்தல் நடவடிக்கைக்கு குந்தகம் விளைவிக்கும் செயலாகும். வருமான வரித்துறையும், தேர்தல் ஆணையமும் மத்திய பா.ஜ.க. அரசின் கைப்பாவையாக மாறிவிட்டதோ என்ற அச்சம் ஏற்படுகிறது.


    தமிழக வாக்காளர்கள் மத்தியில் எதிர்க்கட்சிகள் மீது தவறான எண்ணத்தை ஏற்படுத்தும் வகையில் வருமான வரித்துறையினரின் நடவடிக்கை அமைந்துள்ளது. தேர்தல் காலங்களில் எதிர்க் கட்சி தலைவர்கள், வேட்பாளர்களை அச்சுறுத்தும் போக்கினை வருமான வரித்துறை கைவிடவேண்டும். ஜனநாயக ரீதியாக தேர்தல் நடைபெற தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்:-

    தேர்தல் நேரத்தில் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் வீட்டில் மோடி தலைமையிலான மத்திய அரசு அதிகாரிகள் மூலம் வருமான வரி சோதனை நடத்தியது அதிர்ச்சி அளிக்கிறது. இது மிகவும் கண்டனத்துக்குரியது.

    மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா:-

    தி.மு.க. பொருளாளரும் முன்னாள் அமைச்சருமான துரை முருகன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை செய்துவருவது கண்டனத்திற்குரியது.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்து மத்திய அரசு காபந்து அரசாக செயல்படும் நிலையில் மத்திய பா.ஜ.க. அரசு வருமான வரித்துறையை ஏவிவிட்டு தி.மு.க. பொருளாளர் துரை முருகன் வீட்டில் சோதனை நடத்துவதுஎன்பது அப்பட்டமான ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது.

    பாராளுமன்ற தேர்தலில் நாடு முழுவதும் ஏற்பட விருக்கும் தோல்வி குறித்த பயத்திலும் விரக்தியிலும் மத்திய அரசில் இருக்கும் பாஜக, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தமிழ் நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களின் முக்கிய அரசியல் பிரமுகர்களின் வீடுகளில் வருமான வரி துறையின் சோதனை என்ற பெயரில் பயத்தையும் பதட்டத்தையும் உருவாக்க நினைப்பது வெட்கக்கேடானது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Duraimurugan #DMK #Raid

    Next Story
    ×