search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் - காங். வேட்பாளர் வசந்தகுமார் பேட்டி
    X

    3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் - காங். வேட்பாளர் வசந்தகுமார் பேட்டி

    கன்னியாகுமரி தொகுதியில் 6 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பொதுமக்கள் ஆதரவுடன் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் கூறினார். #LokSabhaElections2019 #HVasanthakumar
    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நாகர்கோவில் வாட்டர் டேங்க் ரோட்டில் இன்று நடந்தது.

    அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய்தத் திறந்து வைத்தார். கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் எச்.வசந்தகுமார், காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார், எம்.எல்.ஏ.க்கள் சுரேஷ்ராஜன், ஆஸ்டின், ராஜேஷ்குமார், பிரின்ஸ், மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன், நகர தலைவர் அலெக்ஸ், தி.மு.க. மாவட்ட பொருளாளர் கேட்சன், தில்லை செல்வம், மகேஷ், கூட்டணி கட்சியைச் சேர்ந்த வெற்றிவேல், சிலம்பு சுரேஷ், வெற்றிவேந்தன், அன்வர் சாதிக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அதன்பிறகு வேட்பாளர் வசந்தகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    எந்த நேரமும் தலைவர்களும், தொண்டர்களும் இங்கு வந்து என்னை சந்திக்கலாம். கருத்துக்களை தெரிவிக்கலாம். 6 சட்டசபை உறுப்பினர்களும், பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட உள்ள நானும் சேர்ந்து குமரி மாவட்ட வளர்ச்சிக்கு பாடுபடுவோம். குமரி மாவட்டத்தில் சரக்கு பெட்டக மாற்று முனையம் வேண்டாம் என்று தான் நாங்கள் கூறுகிறோம். ஒருங்கிணைந்த துறைமுகம் கொண்டு வரப்படும். பெரிய துறைமுகம் அமைய 587 ஏக்கர் நிலமும், சிறிய துறைமுகம் அமைய 350 ஏக்கர் நிலமும் தேவை. நாம் ஏற்கனவே உள்ள துறைமுகத்தை விரிவுப்படுத்த வேண்டும். ஒருங்கிணைந்த மீன் பிடித்துறைமுகம் கொண்டு வர வேண்டும்.

    ரூ.40 ஆயிரம் கோடியில் திட்டங்களை கொண்டு வந்ததாக கூறும் பொன்.ராதாகிருஷ்ணன், அந்த திட்டங்களை பற்றி என்னுடன் விவாதிக்க தயார் என்கிறார். நானும் விவாதத்துக்கு தயார். ஆனால் அதற்கு முன்பு எனது 3 கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்க வேண்டும். இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்று கூறினார். அதுபற்றி பாராளுமன்றத்தில் அவர் பேசவில்லை. சிறப்பு தீர்மானமும் கொண்டு வரவில்லை. அதற்கு அவர் என்ன முயற்சி செய்தார்? மோடி அரசு ஒவ்வொருவரின் கணக்கிலும் ரூ.15 லட்சம் போடப்படும் என்று கூறியது. எத்தனை பேரின் கணக்கில் இந்த பணம் போடப்பட்டுள்ளது.

    2 கோடி பேருக்கு வேலை தருவோம் என்றனர். எத்தனை பேருக்கு வேலை வழங்கி உள்ளனர். இந்த 3 கேள்விகளுக்கும் அவர் பதில் அளித்தால் நான் விவாதிக்கத் தயார். குமரி மாவட்டத்தில் சாய்-சப் சென்டர், விமான நிலையம் கொண்டு வர முயற்சி செய்யவில்லை. விமான நிலையத்தை கூடங்குளத்துக்கு கொண்டு செல்ல முயற்சி செய்துள்ளார்.

    ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியை சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியாக மாற்ற ஏன் முயற்சி செய்யவில்லை. எனது நிறுவனத்தை முடக்க வேண்டும் என்று கூறுகிறார். எங்கள் நிறுவனத்தில் 2500 பேர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுகிறார்கள்.

    அகஸ்தீஸ்வரத்தில் பிறந்த என்னை வெளிநாட்டு பறவை என்கிறார். என்னை வெளிநாட்டு பறவை என்றால் தூத்துக்குடியில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் வேட்பாளர் எங்கிருந்து வந்தவர்? எனது ஓட்டு கூட இங்கு தான் உள்ளது. தோல்வி பயத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் அவ்வாறு பேசுகிறார். நான் 6 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பொது மக்கள் ஆதரவுடன் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். எங்கள் கூட்டணி மற்றும் ஓட்டு வங்கி பலமாக உள்ளது. படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவேன்.

    துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துவது, அவரை மிரட்டவும், பழி வாங்கவும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை ஆகும். அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரிச் சோதனை நடந்தது. ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ராகுல்காந்தி பிரதமர் ஆனதும் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    குமரி மாவட்டத்தில் மார்த்தாண்டம், பார்வதிபுரத்தில் 2 பாலங்கள் கட்டியதே சாதனை என்கிறார். இந்த 3 ஆண்டுகளில் நாங்குநேரி தொகுதியில் நான் பல சாதனைகளை செய்துள்ளேன். தூத்துக்குடி, சென்னை துறைமுகம் நஷ்டத்தில் இயங்குகிறது. தனிநபருக்காக இங்கு துறைமுக திட்டத்தை கொண்டு வர முடிவு செய்துள்ளனர். மக்களை ஏமாற்ற நாடகம் நடத்துகிறார்கள்.

    குமரி மாவட்டத்தில் உள்ள 6 எம்.எல்.ஏ.க்கள் வளர்ச்சியை தடுப்பதாக கூறுகிறார். அவர்கள் மாவட்டத்துக்கு வரும் அழிவை தான் தடுக்கிறார்கள். மணவாளக்குறிச்சி மணல் ஆலையை கூட இவர்களால் காப்பாற்ற முடியவில்லை. தி.மு.க. கொண்டு வந்த திட்டங்களை தாங்கள் தான் கொண்டு வந்ததாக கூறுகிறார்கள். தோல்வி பயத்தால் மாற்றி, மாற்றி அவர்கள் பேசுகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019 #HVasanthakumar

    Next Story
    ×