search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நம்பியூர் அருகே ரூ.1000 கொடுக்காததால் வாலிபர் வெட்டி கொலை
    X

    நம்பியூர் அருகே ரூ.1000 கொடுக்காததால் வாலிபர் வெட்டி கொலை

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே இன்று அதிகாலை 1000 ரூபாய் பணத்தகராறில் வாலிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள புது சூரிபாளையம் ஆண்டவர் கோவில் வீதியை சேர்ந்தவர் கிருபாகரன் (வயது 35). அதே பகுதியை சேர்ந்தவர் அம்மாசை (40).

    இருவரும் உறவினர்கள் ஆவர். 2 பேரும் எங்கே போனாலும் ஒன்றாகத்தான் செல்வார்கள்.

    இதற்கிடையே ஒரு ரிக் வண்டியில் கிருபாகரனுக்கு அம்மாசை வேலைக்கு சேர்த்து விட்டார். மேலும் கிருபாகரனுக்கு ரூ.1000 முன் பணமும் வாங்கி கொடுத்தார்.

    இந்த நிலையில் ரிக்வண்டி வேலை பிடிக்காததால் கிருபாகரன் வேலையை விட்டு விட்டு வீட்டுக்கு வந்து விட்டார். இதையொட்டி தான் முன் பணமாக வாங்கி கொடுத்த 1000 ரூபாயை அம்மாசை திருப்பி தரும்படி கேட்டார்.

    விரைவில் பணம் கொடுத்து விடுகிறேன் என்று கிருபாகரன் காலம் கடத்தி வந்தாராம்.

    இது தொடர்பாக அவர்களிடையே தகராறு இருந்து வந்தது.

    இன்று அதிகாலை 5 மணியளவில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த கிருபாகரனின் கழுத்தில் அம்மாசை அரிவாளால் வெட்டினார். இதில் கழுத்தில் பலத்த வெட்டுபட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே கிருபாகரன் பரிதாபமாக இறந்தார்.

    ரூ.1000 கடனுக்காக வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    இந்த படுகொலை சம்பவம் குறித்து நம்பியூர் போலீசில் கொலை செய்யப்பட்ட கிருபாகரனின் தம்பி காமராஜ் (34) புகார் செய்தார். புகாரின் பேரில் நம்பியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஆல்பர்ட் வழக்கு பதிவு செய்து கொலையாளி அம்மாசையை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×