search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாமல் பள்ளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பெருமாள் சிலை.
    X
    சாமல் பள்ளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பெருமாள் சிலை.

    சூளகிரி அருகே சாமல் பள்ளத்தில் 52 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பெருமாள் சிலை

    64 அடி உயரம், 24 அடி அகலம் கொண்ட பெருமாள் சிலை பல்வேறு இடையூறுகளை தாண்டி வந்திருந்த போதிலும், சாமல் பள்ளத்தில் 52 நாட்களாக நிறுத்தப்பட்டிருப்பது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    சூளகிரி:

    திருவண்ணாமலை மாவட்டம், கொரக்கோட்டையில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட பிரமாண்ட பெருமாள் சிலை பெங்களூரு ஈஜிபுரா எனுமிடத்தில் பீடத்துடன் இணைந்து 108 அடி உயரத்தில் நிறுவ திட்டமிடப்பட்டது. இதற்காக 64 அடி உயரம், 24 அடி அகலம் கொண்ட பெருமாள் சிலையை ராட்சத லாரியில் ஏற்றிக்கொண்டு கடந்த டிசம்பர் மாதம் 7-ந்தேதி பிறப்பட்டனர்.

    வழியில் பல்வேறு தடைகளை தாண்டி கடந்த ஜனவரி மாதம் 16-ந்தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டையை வந்தடைந்தது. அங்கிருந்து ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரியை கடந்து வந்து கடந்த பிப்ரவரி மாதம் 9-ந்தேதி கிருஷ்ணகிரி பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சாமல்பள்ளம் என்னுமிடத்தை அடைந்தது. அங்குள்ள சிறுபாலத்தை கடப்பதில் சிக்கல் ஏற்பட்டதால் பெருமாள் சிலையுடன் லாரி நிறுத்தப்பட்டது.

    இப்பகுதியை கடக்கும் பட்சத்தில் சுமார் 2 கி.மீ தொலைவில் சின்னாறு பாலம் உள்ளது. இதையடுத்து சென்னப்பள்ளி மற்றும் கொல்லப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் சிறு சிறு பாலங்கள் உள்ளன. இதனை தவிர்ப்பதற்காக தேசிய நெடுஞ்சாலையையொட்டி வனப்பகுதி மார்க்கத்தை சிலை பயணத்திற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் வனத்துறை அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

    இதையடுத்து சாலை மார்க்கமாகவே சிலை பயணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளால் சாமல்பள்ளத்தில் இருந்து புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சிலையை லாரியில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டு சுமார் 4 மாத காலமாகியும் குறிப்பிட்ட இடத்திற்கு சென்றடைய முடியாமல் ஏற்பாட்டாளர்கள் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

    ஏற்கனவே வழியில் பல்வேறு இடையூறுகளை தாண்டி வந்திருந்த போதிலும், சாமல் பள்ளத்தில் 52 நாட்களாக பெருமாள் சிலை நிறுத்தப்பட்டிருப்பது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் சிலை பயணத்திற்கு வசதியாக பேரண்டப்பள்ளி என்னும் இடத்தில் தென்பெண்ணை ஆற்றில் தரைப்பாலம் அமைக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இதற்காக ஆற்றில் செல்லும் தண்ணீரை திருப்பி விட்டுள்ளனர். மேலும் குழாய்களை பதித்து அதற்கு மேல் மண் கொட்டி தற்காலிகமாக பாலம் போடும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த பணி நிறைவடைந்ததும் இம்மாத இறுதியில் சாமல்பள்ளத்தில் இருந்து பிரமாண்ட பெருமாள் சிலை புறப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×