search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கரூர் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி 3 பேர் பலி
    X

    கரூர் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி 3 பேர் பலி

    கரூர் அருகே இன்று அதிகாலை தீர்த்தக்குடம் எடுக்க சென்றபோது காவிரி ஆற்றில் மூழ்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    வேலாயுதம்பாளையம்:

    கரூர் மாவட்டம் பரமத்தி அருகே காருடையான்பாளையத்தில் பகவதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழாவையொட்டி இன்று அதிகாலை நொய்யல் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற இருந்தது.

    இதற்காக பக்தர்கள் மற்றும் காருடையான்பாளையம் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் பலர் நொய்யல் காவிரி ஆற்றுக்கு இன்று அதிகாலை சென்றனர். அங்கு அனைவரும் குளித்துவிட்டு, தீர்த்தக் குடம் எடுத்து ஊர்வலமாக செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தனர்.

    அப்போது காருடையான் பாளையம் பாரதி நகரை சேர்ந்த பிரபாகரன் (வயது 20), புருஷோத்தமன் (17), பரமத்தி அருகே புதுக்கநல்லி பகுதியை சேர்ந்த நவீன்குமார் (18) ஆகிய 3 பேரும் ஆற்றில் இறங்கி குளித்தனர்.

    எதிர்பாராதவிதமாக மணல் அள்ளுவதற்காக தோண்டப்பட்டிருந்த குழிக்குள் இறங்கியதில் 3 பேரும் தண்ணீரில் மூழ்கினர். நீச்சல் தெரியாததால் 3 பேரும் தங்களை காப்பாற்றும்படி சத்தம் போட்டனர்.

    அதிர்ச்சியடைந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஆற்றில் தத்தளித்த 3 பேரையும் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும் முடியவில்லை. இதையடுத்து உடனடியாக வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீருக்குள் இறங்கி 3 பேரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்குள் 3 பேரும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

    இதைத்தொடர்ந்து 3 பேரின் உடல்களை மீட்கும் பணி நடைபெற்றது. ஆழமான பகுதிக்குள் மூழ்கியதால் 3 பேரின் உடல்களையும் மீட்பதில் தீயணைப்பு வீரர்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டது. இருப்பினும் பொதுமக்கள் மற்றும் நவீன உபகரணங்கள் உதவியுடன் தண்ணீருக்குள் மூழ்கி உடல்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் புருஷோத்தமன், நவீன்குமார் உடல்கள் மீட்கப்பட்டன. பிரபாகரன் உடலை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

    சம்பவ இடத்திற்கு வேலாயுதம்பாளையம் போலீசார் சென்று விசாரணை நடத்தினர். மேலும் மீட்கப்பட்ட 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பலியான பிரபாகரன் அப்பகுதியில் உள்ள கிர‌ஷர் ஆலையில் பணியாற்றி வந்தார். புருஷோத்தமன் காகித ஆலை தொழிற்பயிற்சி பள்ளியில் படித்து வந்தார். நவீன்குமார் கரூரில் பஸ் பாடி கட்டும் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

    கோவில் திருவிழாவுக்கு தீர்த்தக்குடம் எடுக்க சென்ற போது காவிரி ஆற்றில் மூழ்கி 3 வாலிபர்கள் பலியான சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    Next Story
    ×