search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்டாலின் முதல்வராக வே‌ஷம் போடுகிறார் - ஓ.பன்னீர் செல்வம்
    X

    ஸ்டாலின் முதல்வராக வே‌ஷம் போடுகிறார் - ஓ.பன்னீர் செல்வம்

    ஸ்டாலின் முதல்வராக வருவதற்கு பல்வேறு வே‌ஷங்களை போடுகிறார் என்று துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார். #OPS #MKStalin

    திருப்போரூர்:

    காஞ்சிபுரம் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மரகதம் குமரவேல், திருப்போரூர் சட்டமன்ற வேட்பாளர் எஸ்.ஆறுமுகம் ஆகியோரை ஆதரித்து திருப்போரூர் பஸ் நிலையம் அருகே துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பிரசாரம்  செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    எங்கள் கூட்டணி பலம் வாய்ந்த மகா கூட்டணி. புரட்சித்தலைவி அம்மா மக்களுக்கு பல நல்ல திட்டங்களை அர்ப்பணித்து சிறப்பான ஆட்சி நடத்தியதை யாரும் மறக்கமுடியாது. காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட உச்சநீதிமன்றம்வரை எடுத்துச்சென்று பல சட்டப் போராட்டங்களை நடத்தினார்.

    மத்தியில் காங்கிரஸ், தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் இருந்த போது தான் இலங்கையில் 4 லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். 5 லட்சம் பேர் கை, கால்கள் மற்றும் தங்களின் வாழ்வாதாரங்களை இழந்து நிற்கதியாயினர்.

    கருணாநிதியின் கபட நாடகத்தால் போர் நின்று விட்டதாக அறிந்து பதுங்கு குழியிலிருந்து வெளியில் வந்த 40 ஆயிரம் குழந்தைகள் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டனர். தமிழர்களுக்கு துரோகம் செய்த கட்சி தி.மு.க.

    அ.தி.மு.க.வின் 2011-16 ஆண்டு வரையிலான பொற்கால ஆட்சியில் விலையில்லா அரிசி, பசுமை வீடுகள், மற்றும் தொலை நோக்கு திட்டம் தயாரிக்கப்பட்டது. இதனால் கிராமம், நகரம், பேரூராட்சி, மாநகராட்சி பகுதிகளில் குடிசைவீடுகள் அற்ற நிலை உருவாகிறது.

    இதுவரை தமிழகத்தில் 16 லட்சம் குடிசைவீடுகள் கணக்கிடப்பட்டு 6 லட்சம் வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளன. 2023-க்குள் அம்மா எண்ணப்படி தரமான வீடுகள் கட்டித்தரப்படும்.

    இந்த இடைத்தேர்தல் எதனால் வந்தது கட்சிக்கு துரோகம் செய்தவர்கள் இன்று நடுத்தெருவில் நிற்கிறார்கள். அவர்கள் தன்னை வளர்த்து ஆளாக்கிய அம்மாவிற்கு துரோகம் செய்தவர்கள்.

    ஸ்டாலின் முதல்வராக வருவதற்கு பல்வேறு வே‌ஷங்களை போடுகிறார். அவர் டீக்கடையில் டீ குடிக்கிறார். நான் டீக் கடையே நடத்தியவன். தி.மு.க. ஆட்சியில் கொலை, கொள்ளை, வன்முறை கலாச்சாரம், காலூன்றி கொடிகட்டிபறக்கும்.

    தமிழகத்தில் தீயசக்திகளை தலைதூக்க விடமாட்டோம். இது எம்.ஜி.ஆர் ஆரம்பித்த கட்சி. புரட்சித்தலைவியின் உழைப்பால் பல்வேறு சோதனைகள், பிரச்சனைகள் சதிகளை முறியடித்து இன்று ஒன்றரை கோடி பேர் உள்ள இயக்கமாக மாறி உள்ளது. இது எஃகு கோட்டை. எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது.

    இவ்வாறு அவர் பேசினார். #OPS #MKStalin

    Next Story
    ×