search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொம்மி
    X
    பொம்மி

    பிரசவத்தில் குழந்தையின் தலை துண்டானது: ஆஸ்பத்திரி நர்சுகள்- தாயிடம் மருத்துவ குழுவினர் விசாரணை

    அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்தில் குழந்தையின் தலை துண்டானது தொடர்பாக மருத்துவமனை நர்சுகள் மற்றும் தாயிடம் மருத்துவ குழுவினர் விசாரணை நடத்தினர். #BabyBeheaded
    செங்கல்பட்டு:

    ஆவடியை அடுத்த அயபாக்கத்தை சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மனைவி பொம்மி. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவர் பிரசவத்திற்காக கல்பாக்கத்தை அடுத்த கடலூர் கிராமத்தில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு வந்து இருந்தார்.

    நேற்று அதிகாலை பொம்மிக்கு பிரசவவலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை அருகில் உள்ள கூவத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.

    அங்கு டாக்டர்கள் பணியில் இல்லாததால் நர்சுகளே பிரசவம் பார்த்ததாக தெரிகிறது. அப்போது குழந்தையின் தலைமட்டும் துண்டாகி தனியாக வந்தது. இதையடுத்து ஆபத்தான நிலையில் இருந்த பொம்மிக்கு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வயிற்றில் இருந்த குழந்தையின் உடலை டாக்டர்கள் அகற்றினர்.

    பொம்மிக்கு தொடர்ந்து அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பிரசவத்தில் குழந்தையின் தலை துண்டான சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் இல்லாததால் நர்சுகளே சிகிச்சை அளித்ததாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரியும் பொம்மியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கூவத்தூர் கிழக்கு கடற்கரை சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து விசாரிக்க சுகாதாரத்துறை செயலரின் உத்தரவின் படி 5 பேர்கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டது. இதில் தேசிய நல்வாழ்வு குழுமத்தை சேர்ந்த குமுதா, பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் பழனி, கூடுதல் இயக்குனர் டாக்டர் தாமரைச்செல்வி, செங்கல்பட்டு மருத்துவமனை முதல்வர் டாக்டர் உஷா உள்ளிட்ட 5 பேர் இடம்பெற்று உள்ளனர்.

    அவர்கள் தங்களது விசாரணையை உடனடியாக தொடங்கினர். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் பொம்மியிடம் இது பற்றி கேட்டறிந்தனர்.

    அப்போது இதற்கு முன்பு எடுக்கப்பட்ட குழந்தையின் எக்ஸ்ரே படங்கள், அதன் வளர்ச்சி பற்றிய ஆவணங்களை சேகரித்தனர். இன்று காலை கூவத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ குழுவினர் விசாரணை நடத்துகிறார்கள்.

    இதில் பொம்மிக்கு பிரசவம் பார்த்த நர்சுகள் யார்? யார்? டாக்டர் பணியில் இருந்தாரா? என்பது பற்றிய விபரங்கள் கேட்டு அறிகிறார்கள்.

    இதற்கிடையே பொம்மியின் உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் பிரசவத்தில் குழந்தையின் சாவை சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து இருக்கிறார்கள். போலீசாரும் தனியாக விசாரணையை தொடங்கி உள்ளனர்.

    இறந்துபோன குழந்தையின் உடலும், தலையும் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது.

    பிரேத பரிசோதனை அறிக்கையை வைத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க மருத்துவ குழுவினர் முடிவு செய்து உள்ளனர். மேலும் 5 பேர் குழு கொடுக்கும் அறிக்கையின்படி பொம்மிக்கு பிரசவம் பார்த்தவர்கள் மீதும் துறை ரீதியிலான நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று தெரிகிறது.
    Next Story
    ×