search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டுக்கல்லில் வெடி குண்டு வீசி கணவன்- மனைவி வெட்டி கொலை
    X

    திண்டுக்கல்லில் வெடி குண்டு வீசி கணவன்- மனைவி வெட்டி கொலை

    திண்டுக்கல் அருகே வெடிகுண்டு வீசி கணவன், மனைவி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் பாறைப்பட்டியைச் சேர்ந்தவர் திருப்பூர் பாண்டி (வயது 43). கூலித் தொழிலாளி. அவரது மனைவி பஞ்சு என்கிற பஞ்சவர்ணம் (40). இவர்களது மகன்கள் அசோக், சேகர்.

    திருப்பூர் பாண்டி தனது மகன்கள், மனைவியுடன் கடந்த 3 நாட்களுக்கு முன்பு திண்டுக்கல் தாலுகா போலீஸ் சரகம் நல்லாம்பட்டி நெசவாளர் காலனியில் உள்ள உறவினர் தங்கராஜ் வீட்டுக்கு வந்திருந்தனர்.

    இன்று காலை அசோக், சேகர் ஆகிய 2 பேரும் காலை கடன்களை முடிப்பதற்காக வெளியே சென்று விட்டனர். திருப்பூர் பாண்டியும், பஞ்சவர்ணமும் உறவினர் வீட்டில் இருந்தனர். காலை 10 மணியளவில் 5 பேர் கொண்ட மர்ம கும்பல் அங்கு வந்தது. அவர்கள் முகமூடி அணிந்திருந்தனர். கண் இமைக்கும் நேரத்தில் அவர்கள் தங்கராஜ் வீட்டின் மீது நாட்டு வெடி குண்டுகளை வீசினர்.

    அது பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் வீடு சேதமடைந்தது. சத்தம் கேட்டு பஞ்சவர்ணம் வீட்டில் இருந்து வெளியே வந்தார். அப்போது அங்கு நின்ற 4 பேர் அவரை சரமாரியாக வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே பஞ்சவர்ணம் இறந்தார். சத்தம் கேட்டு திருப்பூர் பாண்டி வந்தார். மர்ம நபர்களை பார்த்ததும் அவர் தப்பி ஓட முயன்றார்.

    உஷாரான அந்த கும்பல் திருப்பூர் பாண்டியை ஓட ஓட அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இதனை பார்த்ததும் அந்த கும்பல் அங்கிருந்து ஓடி விட்டது. இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியது.

    தகவல் அறிந்த போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் சம்பவ இடத்துக்கு விரைந்தார். 2 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் கொலையுண்ட திருப்பூர் பாண்டியின் சொந்த ஊரான பாறைபட்டியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரபல ரவுடி குமரேசன் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் திருப்பூர் பாண்டியின் மகன்கள், அசோக், சேகர் சம்பந்தப்பட்டுள்ளனர்.

    இந்த வழக்கில் கைதான 2 பேரும் ஜாமீனில் வெளியே வந்து கோவையில் வேலை பார்த்து வந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு நல்லாம்பட்டி உறவினர் வீட்டுக்கு வந்திருப்பதை அறிந்த கொலை வெறி கும்பல் அசோக், சேகரை கொல்ல திட்டமிட்டுள்ளனர். அவர்கள் வெளியே சென்றிருந்ததால் தாய்-தந்தையை மர்ம கும்பல் வெட்டி கொன்றுள்ளது. மேற்கண்டவை விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    சிறிது நேரம் கழித்து வெளியே சென்றிருந்த 2 மகன்களும் வீட்டுக்கு வந்தனர். அப்போது தனது தாய் தந்தை கொலை செய்யப்பட்டதை அறிந்து கதறி துடித்தனர். கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தீவிரமாக துப்புதுலக்கி வருகிறார்கள்.
    Next Story
    ×