search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கெங்கை பாண்டி
    X
    கெங்கை பாண்டி

    ஆலங்குளம் அருகே கள்ளக்காதல் தகராறில் வாலிபர் கொலை

    நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே கள்ளக்காதல் தகராறில் வாலிபர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆலங்குளம்:

    நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள புதூர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சரவணன் மகன் கெங்கை பாண்டி (வயது 23). இவர் மாறாந்தை அருகே உள்ள சோலார் பவர் பிளாண்ட் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவர் தனது மோட்டார் சைக்கிளை நெல்லையில் சர்வீஸ் செய்ய கொடுத்திருந்தார்.

    அதனை வாங்குவதற்காக கெங்கை பாண்டி நேற்று மதியம் தனது நண்பர்கள் 2 பேருடன் ஒரு மோட்டார் சைக்கிளில் நெல்லைக்கு சென்றார். அங்கு கெங்கை பாண்டி தனது மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு ஊர் நோக்கி வந்து கொண்டிருந்தார். அவருடன் நண்பர்கள் இருவரும் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.

    நெல்லை அருகே உள்ள அபிஷேகப்பட்டி பகுதியில் வந்தபோது, கெங்கை பாண்டியின் செல்போனுக்கு ஒரு பெண் பேசினார். இதைத்தொடர்ந்து அவர் தனது நண்பர்கள் இருவரையும் ஊருக்கு செல்லுமாறும், தான் மீண்டும் நெல்லைக்கு சென்றுவிட்டு வருவதாகவும் கூறினார். இதனால் அவரது நண்பர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

    அதன்பின்னர் கெங்கை பாண்டி நெல்லைக்கு சென்று விட்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். நெல்லை அபிஷேகப்பட்டியை அடுத்த வெள்ளாளன்குளம் விலக்கு அருகே வந்தபோது, எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதி கீழே தள்ளினர்.

    இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த கெங்கை பாண்டியை, மர்மநபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் தலை மற்றும் முகத்தில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த கெங்கை பாண்டி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். பின்னர் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்

    இதுபற்றிய தகவல் அறிந்ததும் சீதபற்பநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர்.

    மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்தி குமார், ஆலங்குளம் துணை சூப்பிரண்டு சுபாஷினி ஆகியோரும் வந்து விசாரணை நடத்தினர்.

    இதில் திடுக் தகவல் கிடைத்தது. அதன் விபரம் வருமாறு:-

    கொலை செய்யப்பட்ட கெங்கை பாண்டிக்கும், கொண்டாநகரத்தை சேர்ந்த கணேசன் என்பவரது மனைவிக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது வந்தது. அவர்கள் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளனர். இது கணேசனுக்கு தெரிய வந்தது. இதனால் அவர் இருவரையும் எச்சரித்துள்ளார்.

    ஆனால் கள்ளக்காதல் ஜோடியினர் அதை மீறியும் பேசி பழகி உள்ளனர். இது கணேசனுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நேற்று கெங்கை பாண்டி முப்பிடாதியிடம் பேசி விட்டு தனியாக செல்வது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து கணேசனும் அவரது நண்பர்கள் 2 பேர் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் கெங்கை பாண்டியனை விரட்டி சென்று மறித்து சரமாரி வெட்டிக் கொலை செய்தது தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் தப்பி ஓடிய கணேசன் உள்பட 3 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×