search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மணலி தே.மு.தி.க. நிர்வாகி ராஜினாமா - விஜயகாந்தை நம்பி ஏமாந்து விட்டதாக பரபரப்பு கடிதம்
    X

    மணலி தே.மு.தி.க. நிர்வாகி ராஜினாமா - விஜயகாந்தை நம்பி ஏமாந்து விட்டதாக பரபரப்பு கடிதம்

    அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய 2 கட்சிகளுடன் ஒரே நேரத்தில் கூட்டணி பேச்சு நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை மணலி தே.மு.தி.க. நிர்வாகி விஜய் பவுல்ராஜா ராஜினாமா செய்துள்ளார். #DMDK
    போரூர்:

    திருவள்ளூர் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளரான அவர், விஜயகாந்துக்கு பரபரப்பான கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில் கூறியிருப்பதாது:-

    உங்களின் திரைப்பட நடிப்பை உண்மை என நம்பி ஏமாந்த லட்சக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன்.

    உங்களின் கொள்கையை நல்லது என நம்பி கடந்த 1999-ல் ரசிகர் மன்றத்தில் துவக்கி நேற்று வரை உங்களுடன் பயணித்ததை எண்ணி வெட்கப்படுகிறேன், வேதனை அடைகிறேன்.

    அரசியலில் பிழைக்க வரவில்லை. உழைக்க வந்தேன் என அடிக்கடி கூறுவீர்கள்.

    நேற்று உங்களின் உழைப்பை பார்த்த போது நீங்களும் ஒரு சராரி அரசியல் வியாதிதான் என்பதை நிரூபித்து விட்டீர்கள்.

    ஒரே நேரத்தில் அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகளுடன் பேசி லட்சக்கணக்கான தொண்டர்களின் உழைப்பை, ரத்தத்தை நல்ல விலைக்கு விற்க முயற்சித்தீர்கள். தொண்டர்களுக்கு நல்ல மதிப்பு கொடுத்தீர்கள்.

    உங்களுக்கு உடல் நலம் சரியில்லை என இறைவனின் பிரார்த்தனை செய்ததற்கு நீங்கள் நல்ல கைமாறு செய்தீர்கள்.

    பொது வாழ்வில் தொண்டனின் நலம், தமிழகத்தின் நலம் முன்னெடுத்து செல்ல வேண்டும்.

    உங்களின் பொது வாழ்வு பதவி ஆசை என்ற நிலையில் உள்ளது.

    இனியாவது உங்களை நம்பியவர்களை அடகு வைத்து தேர்தல் கூட்டணி பேசாதீர்கள். அதுதான் நீங்கள் தமிழகத்திற்கு செய்யும் நன்மை.

    உங்களிடம் கேள்வி கேட்க உரிமை உண்டு என்பதால் கேட்கிறேன். அ.தி.மு.க.வில் தேர்தல் பொறுப்புக்குழு தலைவராக மாபா. பாண்டியராஜன் இருந்தால் உங்களின் நிலை என்ன?

    தி.மு.க.வில் தேர்தல் பொறுப்புக்குழு தலைவராக ஈரோடு சந்திரகுமார் மற்றும் பி.எச். சேகர் இருந்திருந்தால் நீங்கள் தேர்தல் கூட்டணி குறித்து பேசி இருப்பீர்களா?

    உங்களின் பதிலை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

    இனியும் உங்களின் நடிப்பை நம்பி ஏமாற தயாராய் இல்லாததால் தே.மு.தி.க.வின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பதவியையும் ராஜினாமா செய்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த கடிதத்தை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் இன்று கொடுத்து விட்டு பவுல்ராஜா, பத்திரிகையாளர்களிடம் வழங்கினார். #DMDK
    Next Story
    ×