search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈஷா மகாசிவராத்திரி விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்பு
    X

    ஈஷா மகாசிவராத்திரி விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்பு

    கோவையில் வருகிற 4-ந்தேதி ஈஷா யோகா மையத்தில் நடைபெற உள்ள மகாசிவராத்திரி விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்கிறார். #MahaSivarathiri #RamNathKovind
    கோவை:

    இந்திய கலாசாரத்தில் மகாசிவராத்திரி என்பது மிக முக்கியமான ஒரு நாளாகும். குறிப்பாக, ஆன்மீக பாதையில் இருப்பவர்களுக்கு அவர்கள் உள்நிலையில் வளர்வதற்கு இந்நாள் பல்வேறு சாத்தியங்களை வழங்குகிறது.

    இதன்காரணமாக, கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் மகாசிவராத்திரி விழா ஆண்டுதோறும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஈஷாவில் நடக்கும் மகாசிவராத்திரி விழா உலகின் பிரமாண்டமான மகாசிவராத்திரி விழாவாக கருதப்படுகிறது.

    அதன்படி, இந்தாண்டு, 25வது ஆண்டு மகாசிவராத்திரி விழா வரும் மார்ச் 4ம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 6 மணி வரை மிக கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

    இவ்விழாவில் பாரத குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். இதையொட்டி, மகாசிவராத்திரி தினத்தன்று மாலை ஈஷா யோகா மையத்துக்கு வரும் அவர் சத்குருவுடன் தியானலிங்கத்தில் நடைபெறும் சக்திவாய்ந்த பஞ்ச பூத ஆராதனையில் கலந்துகொள்கிறார். மேலும், லிங்க பைரவி, சூர்ய குண்டம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று விட்டு மஹாசிவராத்திரி விழா நடக்கும் இடத்திற்கு வருகை தருவார். அங்கு சத்குருவுடன் இணைந்து புல்வாமா தாக்குதலில் உயிர் தியாகம் செய்த நம் ராணுவ வீரர்களின் நினைவாக மரக்கன்றுகளை நட உள்ளார்.

    ஆதியோகி முன்பு நடக்கும் இவ்விழாவில் சத்குருவின் அருளுரை, சக்திவாய்ந்த நள்ளிரவு தியானம், மந்திர உச்சாடனைகள், லிங்க பைரவி மஹா யாத்திரை, பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளில் இருந்து வரும் தலைசிறந்த கலைஞர்களின் பாரம்பரிய இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள், நாட்டுப்புற இசை நிகழ்ச்சிகள், சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா குழுவினரின் இசை நிகழ்ச்சிகள் என பல்வேறு அம்சங்கள் இடம் பெறுகின்றன.

    குறிப்பாக, தேசிய விருது வென்ற பிரபல இசையமைப்பாளர் அமித் திரிவேதி, மெல்லிசை வித்தகர் ஹரிஹரன், பிரபல பின்னணி பாடகர் கார்த்திக் உள்ளிட்டோர் பங்கேற்று இசை விருந்து படைக்க உள்ளனர்.

    இவ்விழாவை மேலும் அழகூட்ட நூற்றுக்கணக்கான நாட்டு மாடுகள் பங்கேற்கும் நாட்டு மாடுகள் கண்காட்சி, தலைப்பாகை கட்டுதல், வீதி நாடகங்கள், பல்வகை சேலை உடுத்தும் பயிற்சி, பல மாநில உணவு அரங்கங்கள் உள்ளிட பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. இந்தாண்டு, மக்களின் கண்ணை கவரும் விதமாக ஆதியோகி குறித்த பிரத்யேகமாக ‘லேசர் ஷோ’ ஒன்றும் நடத்தப்பட உள்ளது.

    மகாசிவராத்திரி விழாவுக்கு வரும் பக்தர்களுக்கு ஆதியோகி ஒரு வருடமாக அணிந்திருந்த 1 லட்சத்து 8 ருத்ராட்ச மணிகள் மற்றும் சர்ப்ப சூத்திரம் பிரசாதமாக வழங்கப்படும். விழாவில் பங்கேற்கும் லட்சக்கணக்கான மக்களுக்கு மஹா அன்னதானமும் வழங்கப்பட உள்ளது.

    மகாசிவராத்திரி விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்டங்களில் தன்னார்வ தொண்டர்கள் மூலம் பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், விழா நாட்களில் கோவையில் இருந்து ஈஷா யோகா மையத்துக்கு சிறப்பு பேருந்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    பேருந்து முன்பதிவுக்கு 83000 83111 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். #MahaSivarathiri #RamNathKovind
    Next Story
    ×