search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒருதலை காதலால் விபரீதம்- ஆசிரியையை கொன்றுவிட்டு ஓடிய வாலிபர் தற்கொலையா?
    X

    ஒருதலை காதலால் விபரீதம்- ஆசிரியையை கொன்றுவிட்டு ஓடிய வாலிபர் தற்கொலையா?

    குறிஞ்சிப்பாடியில் ஒருதலை காதலால் ஆசிரியையை கொன்றுவிட்டு ஓடிய வாலிபர் தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #KurinjipadiMurder
    குறிஞ்சிப்பாடி:

    குறிஞ்சிப்பாடி சின்ன கடை வீதியை சேர்ந்த சுப்பிரமணியன் மகள் ரம்யா (22).

    கடலூரில் உள்ள பெண்கள் கல்லூரியில் படித்துள்ளார். அப்போது விருத்தகிரிகுப்பம் கிராமத்தை சேர்ந்த ராஜசேகர் என்பவரும் அரசு கலை கல்லூரியில் படித்துள்ளார். ரம்யாவும் ராஜசேகரும் ஒரே பேருந்தில் கல்லூரிக்கு சென்று வந்துள்ளார்கள்.

    இருவரும் வேறு வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள். ராஜசேகர் ரம்யாவை காதலிப்பதாக கூறினார். அதற்கு ரம்யா மறுத்தார். ஆனாலும் ராஜசேகர் விடாமல் பல முறை காதலிப்பதாக கூறியுள்ளார். ராஜசேகரின் தொல்லை பொறுக்க முடியாமல் ஒரு கட்டத்தில் ரம்யா ‘நான் காதலிக்க மாட்டேன், நீ வேண்டும் என்றால் எங்கள் வீட்டில் வந்து பேசிக்கொள்’ என கூறியுள்ளார்.

    6 மாதத்துக்கு முன் ரம்யா வீட்டிற்கு வந்து ராஜசேகர் பெண் கேட்டார். அதற்கு ரம்யாவின் பெற்றோர் முடியாது என மறுத்துள்ளனர். அதன் பிறகு ரம்யா ராஜசேகரை புறக்கணித்தார். இதனால் ராஜசேகர் ஆத்திரம் அடைந்தார். ரம்யா ஆசிரியையாக பணியாற்றிய குறிஞ்சிப்பாடியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளிக்கு நேற்று காலை சென்றார்.

    பள்ளியில் தனியாக இருந்த ரம்யாவை கத்தியால் சரமாரியாக வெட்டினார். கழுத்தில் பலத்த காயமடைந்த ரம்யா சம்பவ இடத்திலேயே உயிழந்தார். ரம்யாவின் வலது கை விரல்களும் துண்டாகின.

    நேற்று மாலை ராஜசேகரின் சகோதரி ஆனந்தியின் செல்போனுக்கு அவர் தகவல் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறிவிட்டு செல்போனை சுவிட்ச் ஆப் செய்துள்ளார்.

    ராஜசேகரின் செல்போன் டவர் சிக்னலை வைத்து போலீசார் அவரைத் தேடி வருகின்றனர். தனக்கு கிடைக்காத பெண் யாருக்கும் கிடைக்க கூடாது என ராஜசேகர் ரம்யாவை கொலை செய்தாரா? கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வெறும் மிரட்டலா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #KurinjipadiMurder
    Next Story
    ×