search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி போட்டியிடுவது உறுதி- அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு
    X

    தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி போட்டியிடுவது உறுதி- அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு

    தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி நிற்பது உறுதி என்று அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ பேசியுள்ளார். #anitharadhakrishnanmla #kanimozhi #parliamentelection

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் ஒன்றியம் முதலூர் ஊராட்சியில் தி.மு.க. சார்பில் ஊராட்சி சபைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கிளை செயலாளர் ராசபாண்டி தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். பின்னர் அவர் கூறியதாவது:-

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழக மக்களுக்காக உழைக்கும் தி.மு.க.விற்கு வாக்களிக்க வேண்டும். இந்த தொகுதியில் கனிமொழி எம்.பி. போட்டியிடுவார். அவர் பெண்களின் குறைகளை நன்கு அறிந்து புரிந்தவர். எனவே பெண்கள் தி.மு.க.விற்கு வாக்களிக்க வேண்டும்.


    அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியை தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள். காரணம் இது சந்தர்பவாத கூட்டணி. இந்த கூட்டணியில் பா.ம.க.வும் உள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் ஊழல் இருப்பதாக கவர்னரிடம் பா.ம.க. தலைவர் ராமதாஸ் மனு கொடுத்ததை தமிழக மக்கள் மறந்துவிடவில்லை. இந்த பகுதியில் சடையனேரி மற்றும் கன்னடியன் திட்டங்கள் தி.மு.க. ஆட்சியில் தான் வந்தது.

    இப்போது கன்னடியன் திட்டம் கிடப்பில் போடப்பட்டு விட்டது. இதைப்போல் சடையனேரி கால்வாய் வலுவாக இருக்க வேண்டும். நிரந்தர கால்வாய் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். நிச்சயமாக ஸ்டாலின் தமிழக முதல்வராக வந்தால் கோரிக்கைகள் நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்கப்படும்.

    தி.மு.க. கூட்டணி பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் மத்தியில் ராகுல்காந்தி பிரதமராக வருவார். எனவே தமிழக மக்களுக்கு பல நல்ல திட்டங்கள் கிடைத்திட மத்தியிலிருந்து அதிக நிதி பெற்றிட தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வர வேண்டும்.

    இந்த பகுதிக்கு மயான இட வசதி வேண்டும் என்று கேட்டுள்ளார்கள். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் நிச்சயமாக நானே நேரில் வந்து இடம் வசதி செய்து தருவேன். தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி நிற்பது உறுதி. கனிமொழியை குறைந்தபட்சம் 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் நீங்கள் வெற்றி பெற செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். #anitharadhakrishnanmla #kanimozhi #parliamentelection

    Next Story
    ×