search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலத்தில் இளம்பெண் மர்ம மரணம்- அரசு ஆஸ்பத்திரியில் உறவினர்கள் முற்றுகை
    X

    சேலத்தில் இளம்பெண் மர்ம மரணம்- அரசு ஆஸ்பத்திரியில் உறவினர்கள் முற்றுகை

    சேலத்தில் இளம்பெண் மர்மமான முறையில் இறந்தது குறித்து சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உறவினர்கள் முற்றுகையிட்டனர்.

    சேலம்:

    சேலம் அம்மாப்பேட்டை, ராமசுந்தரம் தெருவை சேர்ந்தவர் அறிவழகன். இவரது மனைவி தீபிகா (வயது 27). இவர்களுக்கு திருமணம் நடந்து 4 வருடங்கள் ஆகிறது. இவர்களுக்கு முகிலன் (3) என்ற மகன் உள்ளார்.

    இந்த நிலையில் அறிவழகன் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததாக தெரிகிறது. மேலும் அவர், தனது மனைவி தீபிகாவிடம் அடிக்கடி சண்டை போட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

    நேற்று இரவு இருவருக்கும் இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அப்போது தீபிகா வீட்டின் அறையில் திடீரென தூக்கில் தொங்கிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

    இதையடுத்து அறிவழகன் குடும்பத்தினர் வீட்டின் வெளியே வந்து அக்கம், பக்கத்தினரிடம் தீபிகா அறை கதவை பூட்டிக் கொண்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். உடனே ஓடி வாருங்கள் என கூறியுள்ளனர்.

    உடனே அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து அறை கதவை உடைத்து உள்ளே புகுந்து தீபிகாவை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக வாகனத்தில் ஏற்றி சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோது வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் பற்றி அம்மாப் பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் தீபிகா எப்படி இறந்தார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே மகள் இறந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும் அவருடைய தாய் கதறி அழுதார். இன்று காலை பெற்றோர் தங்களது உறவினர்கள் சுமார் 100 பேருடன் திரண்டு சேலம் அரசு ஆஸ்பத்திக்கு வந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரி பிரேத பரிசோதனை அறை முன்பு முற்றுகையிட்டு மகள் சாவுக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி கதறி அழுதனர்.

    அப்போது தீபிகாவின் தாயார் போலீசாரிடம் கண்ணீர் மல்க கூறியதாவது:-

    இரவு 10 மணி வரை தீபிகா எங்களிடம் நல்லாகத்தான் பேசிக் கொண்டிருந்தார். அதன் பிறகு அவர் எப்படி தற்கொலை செய்திருக்க முடியும்?. தீபிகா சாவில் மர்மம் உள்ளது. அவரை அடித்துக் கொன்று தூக்கில் தொங்க விட்டு இருக்கிறார்கள். போலீசார் கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் போலீசாரிடம் கூறினார்.

    தொடர்ந்து பிரேத பரிசோதனை அறை முன்பு தீபிகாவின் குடும்பத்தினர் கதறி அழுதபடி இருந்ததை பார்க்கும்போது சோகத்தை ஏற்படுத்தியது.

    தீபிகாவுக்கு திருமணமாகி 4 வருடங்களே ஆவதால் சேலம் ஆர்.டி.ஓ.குமரேசன் மேல் விசாரணை நடத்த உள்ளார்.

    Next Story
    ×