search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாலகிருஷ்ண ரெட்டியின் ஓசூர் சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிப்பு
    X

    பாலகிருஷ்ண ரெட்டியின் ஓசூர் சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிப்பு

    அதிமுக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனைக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ள நிலையில், ஓசூர் தொகுதி காலியானதாக முறைப்படி அறிவிக்கப்பட்டுள்ளது. #BalakrishnaReddy #HosurConstituency
    சென்னை:

    ஓசூர் அருகே உள்ள பாகலூர் ஜி.மங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதை தடுக்கக் கோரி 1998ம் ஆண்டு பொது மக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது. போலீஸ் ஜீப், அரசு பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டது.

    இதுகுறித்து போராட்டக்காரர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் தமிழக அமைச்சராக பதவி வகித்த பாலகிருஷ்ணரெட்டியும் ஒருவர். இந்த வழக்கில் அவர் 72வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார்.

    வழக்கை விசாரித்த சென்னை சிறப்பு கோர்ட்டு நீதிபதி சாந்தி, பாலகிருஷ்ண ரெட்டி உள்பட 16 பேரை குற்றவாளியாக அறிவித்து, பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடந்த ஜனவரி 7-ந் தேதி தீர்ப்பு வழங்கினார்.

    இந்த தீர்ப்பினால், அமைச்சர் பதவியை பாலகிருஷ்ண ரெட்டி இழந்தார். அதேநேரம், தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், பாலகிருஷ்ண ரெட்டி மேல்முறையீடு செய்தார். அத்துடன், கீழ் கோர்ட்டு வழங்கிய தீர்ப்புக்கு தடை விதிக்கவேண்டும் என்று இடைக்கால மனு ஒன்றையும் தாக்கல் செய்தார்.



    இந்த இடைக்கால மனுவை விசாரித்த நீதிபதி பார்த்திபன், ‘கீழ் கோர்ட்டு வழங்கிய சிறை தண்டனை தீர்ப்புக்கு தடை விதிக்க முடியாது’ என்று கடந்த மாதம் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் பாலகிருஷ்ண ரெட்டி மேல்முறையீடு செய்தார்.

    இந்த மனு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், சஞ்சய்கண்ணா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது  நீதிபதிகள், ‘கீழ் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பின் விவரங்களை பரிசீலித்துதான், அந்த தண்டனைக்கு ஐகோர்ட்டு தடை விதிக்க மறுத்துள்ளது. எனவே, கீழ் கோர்ட்டு தண்டனைக்கு நாங்களும் தடை விதிக்க முடியாது.  இந்த வழக்கிற்கு 4 வாரத்துக்குள் பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு நோட்டீசு அனுப்புகிறோம்’ என்று உத்தரவிட்டனர்.

    இந்நிலையில் பாலகிருஷ்ண ரெட்டிக்கு தண்டனை விதிக்கப்பட் நிலையில் ஓசூர் தொகுதி காலியானதாக முறைப்படி அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஓசூர் தொகுதி காலியாக இருப்பதாக தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் முறைப்படி அறிவித்துள்ளார்.

    2019 ஜனவரி 7 முதல் ஓசூர் தொகுதி காலியாக இருப்பதாக இன்று அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

    இதையடுத்து தமிழகத்தில் ஓசூர், திருவாரூர், திருப்பரங்குன்றம் உள்பட 21 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளன. #BalakrishnaReddy  #HosurConstituency
    Next Story
    ×