search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மீட்கப்பட்ட மாணவியின் எலும்புக்கூடு- கைதான சங்கரய்யா
    X
    மீட்கப்பட்ட மாணவியின் எலும்புக்கூடு- கைதான சங்கரய்யா

    மாணவியை பம்புசெட்டில் அடைத்து 5 நாட்கள் கற்பழித்து கொன்ற கொடூரம்- 5 பேர் கைது

    பள்ளிப்பட்டு அருகே 10-ம் வகுப்பு மாணவியை பம்புசெட்டில் 5 நாட்கள் அடைத்து வைத்து கற்பழித்து கொன்றது தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
    பள்ளிப்பட்டு:

    பள்ளிப்பட்டை அடுத்த வெங்கடாபுரத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி ஒருவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7-ந்தேதி பள்ளிக்கு சென்றபோது மாயமானார். அவரை போலீசார் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் கிச்சலம் கிராமத்தில் உள்ள கரும்பு தோட்டத்தில் உள்ள ஓடையில் மாணவியின் எலும்புக்கூடுகளும், பள்ளி சீருடையும் கிடந்தது. அவர் அணிந்திருந்த கம்மல், வெள்ளி கொலுசு ஆகியவையும் கிடைத்தன.

    இதையடுத்து மாயமான மாணவி கொலை செய்யப்பட்டதை உறுதி செய்த போலீசார் எலும்புக் கூடுகளை சென்னையில் உள்ள தடயவியல் பரிசோதனை மையத்துக்கு அனுப்பி வைத்தனர்.

    கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே மாணவி கொலையில் அதே கிராமத்தை சேர்ந்த சங்கரய்யாவை போலீசார் கைது செய்தனர்.

    அவர் கொடுத்த தகவலின்படி கீச்சலத்தை சேர்ந்த கரும்பு தோட்ட உரிமையாளர் நாதமுனி, கிருஷ்ணமூர்த்தி, ஜெகதீஷ், மோகன்ராஜ் ஆகிய 4 பேரையும் அதிரடியாக பிடித்தனர்.

    அவர்கள் அனைவரும் சேர்ந்து மாணவியை பம்புசெட்டில் அடைத்து வைத்து கொடூரமாக கற்பழித்து கொலை செய்து இருப்பதும், பின்னர் உடலை புதைத்ததும் தெரியவந்தது.

    கொலையுண்ட மாணவியை சங்கரய்யா ஒருதலையாக காதலித்து வந்தார். ஆனால் மாணவி இந்த காதலை ஏற்கவில்லை. இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ந்தேதி மாணவியிடம் சங்கரய்யா பேச்சு கொடுத்தார். அப்போது அருகில் உள்ள கரும்பு தோட்டத்தில் உனது நண்பர் ஒருவர் சந்திக்க காத்து இருப்பதாக மாணவியிடம் தெரிவித்தார்.

    இதனை நம்பிய மாணவி கரும்பு தோட்டத்துக்கு சென்றார். அப்போது அங்கு வந்த சங்கரய்யா மாணவியை மிரட்டி அருகில் உள்ள பம்புசெட்டுக்கு அழைத்து சென்று கற்பழித்தார். பின்னர் பம்புசெட்டை வெளிப்புறமாக மூடிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

    இதைத் தொடர்ந்து பயந்து போன சங்கரய்யா மாணவியை கற்பழித்தது குறித்து ஜெகதீசிடம் தெரிவித்து இருக்கிறார். இதனால் சபலம் ஏற்பட்ட ஜெகதீஷ் மாணவி குறித்து நண்பர்களான நாதமுனி, கிருஷ்ண மூர்த்தி, மோகன் ராஜ் ஆகியோரிடமும் கூறி இருக்கிறார்.

    அவர்கள் 4 பேரும் பம்பு செட்டுக்கு வந்து மாணவியை மாறி மாறி கற்பழித்தனர். இந்த கொடூரம் தொடர்ந்து 5 நாட்களாக நடந்துள்ளது. இதில் உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவி பரிதாபமாக இறந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த நாதமுனி உள்பட 4 பேரும் மாணவி இறந்தது குறித்து வெளியில் தெரிவிக்காமல் இருக்க சங்கரய்யாவிடம் கெஞ்சி கேட்டுள்ளனர். இதற்காக ரூ. 5 ஆயிரமும் கொடுத்ததாக தெரிகிறது.

    பின்னர் 5 பேரும் சேர்ந்து மாணவியின் உடலை கரும்பு தோட்டத்தில் புதைத்தனர். மாணவி மாயமான விவகாரத்தில் போலீசாருக்கு எந்த துப்பும் கிடைக்காததால் அவர்கள் நிம்மதி அடைந்தனர்.

    இதற்திடையே அந்த கரும்பு தோட்டத்தில் அறுவடை நடக்க இருந்தது. இதனால் மாணவி உடலை புதைத்தது வெளியில் தெரிந்துவிடும் என்று நினைத்து அவர்கள் கலக்கம் அடைந்தனர்.

    இதனால் மாணவியின் உடலை மீண்டும் தோண்டி எடுத்து அருகில் உள்ள கால்வாய் ஓரத்தில் புதைத்து இருக்கிறார்கள். உடலை ஆழமாக தோண்டி புதைக்காததால் மாணவியின் எலும்புக்கூடு வெளியே வந்துவிட்டது.

    இதனால் கொலையாளிகள் 5 பேரும் சிக்கிக் கொண்டனர். மாணவியை கொன்று புதைத்தது எப்படி? என்பது குறித்து சங்கரய்யா கொலை நடந்த இடத்தில் நடித்து காட்டினார்.

    அப்போது அங்கு புதைக்கப்பட்டிருந்த மாணவியின் புத்தக பையை போலீசார் மீட்டனர். கைதான 5 பேரிடமும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி, டி.எஸ்.பி. சேகர் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

    மாணவியை 5 நாட்கள் அடைத்து வைத்து கொடூரமாக கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பள்ளிப்பட்டு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×