search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மனைவியை தாய் வீட்டிற்கு அனுப்பி விட்டு 2-வது திருமணம் செய்த கணவர்- மகளிர் போலீசில் புகார்
    X

    மனைவியை தாய் வீட்டிற்கு அனுப்பி விட்டு 2-வது திருமணம் செய்த கணவர்- மகளிர் போலீசில் புகார்

    ஒரத்தநாடு அருகே மனைவியை தாய் வீட்டிற்கு அனுப்பி விட்டு 2-வது திருமணம் செய்த கணவர் மீது மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் 2 பேரை தேடி வருகிறார்கள்.

    ஒரத்தநாடு:

    ஒரத்தநாடு அருகே காவராப்பட்டு தெற்கு தெருவை சேர்ந்தவர் சிகாமணி (வயது40). இவருக்கும், ஒக்கநாடு மேலையூரை சேர்ந்த ரெங்கசாமி மகள் சுதாமணி என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 2 குழந்தைகள் உள்ளனர்.

    சிகாமணி அடிக்கடி வெளிநாடு சென்று விட்டு வருவது வழக்கம். இந்நிலையில் மனைவியை வரதட்சணை கேட்டு சிகாமணி கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் அவர் கோபித்துக் கொண்டு குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு சென்று விட்டாராம். இதையடுத்து ரெங்கசாமி தனது மகளை கணவருடன் சேர்த்து வாழ வைக்க எடுத்த அனைத்து முயற்சியும் தோல்வியில் முடிந்து விட்டதாக தெரிகிறது.

    இந்நிலையில் சிகாமணி மனைவி வீட்டாருக்கு தெரியாமல் ஒக்கநாடு கீழையூரை சேர்ந்த சென்னையில் தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வரும் நதியா என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டுள்ளார். இதையறிந்த சுதாமணி அதிர்ச்சியடைந்து இதுபற்றி பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ நிலையத்தில் புகார் செய்தார்.

    இதன் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயா வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள சிகாமணி, அவரது 2-வது மனைவி நதியா ஆகியோரை தேடி வருகின்றார்.

    Next Story
    ×