search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதமாற்ற விவகாரத்தில் கொலை: தஞ்சை மாவட்டம் முழுவதும் 11ந்தேதி கடையடைப்பு- எச்.ராஜா பேட்டி
    X

    மதமாற்ற விவகாரத்தில் கொலை: தஞ்சை மாவட்டம் முழுவதும் 11ந்தேதி கடையடைப்பு- எச்.ராஜா பேட்டி

    கும்பகோணம் அருகே திருபுவனத்தில் பா.ம.க. பிரமுகர் ராமலிங்கம் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். #hraja #bjp

    கும்பகோணம்:

    மதம் மாற்றம் செய்வது குறித்து எதிர்த்து பேசியதால் ராமலிங்கம் கொலை செய்யப்பட்டதாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த கொலை சம்பவத்துக்கு இந்து அமைப்புகள் சார்பில் கடும் கண்டனம் தெரிவித்து திருபுவனம் பகுதியில் சுவரொட்டிகள் ஓட்டப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் பா.ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா இன்று காலை திருபுவனம் வந்தார். பின்னர் ராமலிங்கம் வீட்டுக்கு சென்று அவரது மகன்கள், மற்றும் குடும்பத்தினரிடம் ஆறுதல் கூறினார்.

    இதையடுத்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மத மாற்றம் குறித்து கேள்வி கேட்டதற்காக ராமலிங்கம் கொலை செய்யப்பட்டுள்ளது வேதனை அளிக்கிறது. அவர் பேசியது நியாயமாக தான் பேசி உள்ளார். கொலை குற்றவாளிகளை போலீசார் உடனே கைது செய்ய வேண்டும்.

    நான் ராமலிங்கம் வீட்டுக்கு செல்லும் வழியை போலீசார் தடை செய்தனர். மாற்று வழியில் செல்லும் நிலைமை ஏற்பட்டது. கொலை குற்றவாளிகளை போலீசார் பதுக்கி வைத்துள்ளார்களா என்ற சந்தேகம் உள்ளது.

    தமிழகத்தில் இந்து மதத்தை அவமதிக்கும் இஸ்லாமிய அமைப்புகளை அரசு தடை செய்ய வேண்டும். இந்துக்கள் பாதிக்கப்பட்டால் ஸ்டாலின், வைகோ, திருமாவளவன், சீமான் ஆகியோர் குரல்கொடுக்க மாட்டார்கள். ராமலிங்கம் கொலையை கண்டித்து இவர்கள் ஏதும் கூறவில்லை. திராவிட கட்சிகள், இந்து மதத்தை அழிக்கும் செயலை செய்து வருகின்றன.

    கேரளாவில் நடந்த தேர்வில் இஸ்லாமிய மதம் குறித்த கேள்வியை தயாரித்த ஜோசப் என்பவரின் கை வெட்டப்பட்ட சம்பவம் நடந்தது. இதேபோல் தான் ராமலிங்கத்தின் கொலையும் நடந்துள்ளது. இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

    ராமலிங்கம் படுகொலையை கண்டித்து தஞ்சை மாவட்டம் முழுவதும் வருகிற 11-ந் தேதி (திங்கட்கிழமை) பா.ஜனதா மற்றும் இந்து அமைப்புகள், சமுதாய அமைப்புகள் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×