search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண் வார்டன் தற்கொலை- காதலனை கைது செய்யக்கோரி உறவினர்கள் மறியல்
    X

    பெண் வார்டன் தற்கொலை- காதலனை கைது செய்யக்கோரி உறவினர்கள் மறியல்

    கடலூர் அருகே பெண் வார்டன் தற்கொலை செய்து கொண்டார். இதற்கு காரணமான காதலனை கைது செய்யக்கோரி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பெரியகாட்டுப்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்லப்பன். இவரது மகள் செந்தமிழ்ச்செல்வி (வயது 24). இவர் திருச்சி மத்திய பெண்கள் சிறையில் சிறை வார்டனாக பணியாற்றி வந்தார். திருச்சி கே.கே.நகர் காவலர் குடியிருப்பில் தங்கி இருந்தார்.

    இந்த நிலையில் செந்தமிழ்ச்செல்வி, தான் தங்கியிருந்த வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார்.

    இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே கே.கே.நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து செந்தமிழ்ச்செல்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    செந்தமிழ்ச்செல்வி இறந்தது பற்றிய தகவல் பெரியகாட்டுப்பாளையத்தில் உள்ள அவரது உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

    இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் ரெட்டிச்சாவடி போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர். பின்னர் உள்ளே சென்ற அவர்கள் அங்கிருந்த போலீசாரிடம், செந்தமிழ்ச்செல்வி சாவுக்கு அவரது காதலனே காரணம்.

    செந்தமிழ்ச்செல்வியை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி விட்டு தற்போது மறுத்துள்ளார். இதனால் அவளின் காதலன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்றனர்.

    அதற்கு அங்கிருந்த போலீசார், சம்பவம் நடந்த ஊரில் உள்ள போலீசில்தான் நீங்கள் புகார் செய்ய வேண்டும். அவர்கள்தான் நடவடிக்கை எடுப்பார்கள் என்று கூறி அவர்களை அனுப்பி வைத்தனர்.

    இதனை ஏற்றுக்கொண்ட செந்தமிழ்ச்செல்வியின் உறவினர்கள் போலீஸ் நிலையத்தில் இருந்து வெளியேறினர்.

    பின்னர் அவர்கள் இது தொடர்பாக திருச்சி கே.கே.நகர் போலீசில் புகார் அளிக்க சென்றனர். அங்கு இவர்கள் கொடுத்த புகாரை போலீசார் ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனை தொடர்ந்து இன்று காலை பெரியகாட்டுப்பாளையம் பகுதியில் உள்ள கடலூர்- புதுவை சாலையில் செந்தமிழ்ச்செல்வியின் உறவினர்கள் திடீரென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இது பற்றிய தகவல் அறிந்த ரெட்டிச்சாவடி போலீசார் சம்பவ இடத் துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது, போராட்டக்காரர்கள் செந்தமிழ்ச்செல்வியின் சாவுக்கு காரணமான அவரது காதலனை கைது செய்யும்வரை எங்களது போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று கூறி போலீசாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு அதிவிரைவு படை போலீசார் வரவழைக்கப்பட்டு குவிக்கப்பட்டனர். அந்த பகுதியில் ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் அவர்கள் கண்காணித்து வருகின்றனர்.

    போராட்டக்காரர்களிடம் போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். உங்களது கோரிக்கையை ஒரு மனுவாக எழுதி கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் கொடுங்கள். அதன் பின்னர் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது இந்த போராட்டத்தை கைவிட்டு இங்கிருந்து கலைந்து செல்லுங்கள் என்று கூறினர்.


    இதனை ஏற்றுக் கொண்ட செந்தமிழ்ச்சசெல்வியின் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு சாலையோரம் திரண்டு நிற்கின்றனர். இதனால் அந்த பகுதியில் தொடர்ந்து பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×