search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கணவரை கொன்று கழிவுநீர் குழாயில் திணித்த மனைவி- கள்ளக்காதலன் உள்பட 4 பேர் கைது
    X

    கணவரை கொன்று கழிவுநீர் குழாயில் திணித்த மனைவி- கள்ளக்காதலன் உள்பட 4 பேர் கைது

    தஞ்சையில் கணவரை கொன்று சாக்குமூட்டையில் கட்டி கழிவுநீர் குழாயில் திணித்த மனைவி, கள்ளக்காதலன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

    அம்மாபேட்டை:

    மதுரை மாவட்டம் மாரனவாரிஏந்தல் கிராமம் திருமால்புரத்தை சேர்ந்தவர் திருமலைச்சாமி மகன் கருப்பு என்கிற இளஞ்செழியன் (வயது 29). இவர் கட்டிட கட்டுமான சென்டரிங் தொழிலாளி.

    இவர் கடந்த 2012ம் ஆண்டு கட்டிட வேலைக்காக தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள மகிமாலை ஊராட்சி அக்கரைபடுகை கிராமத்துக்கு வந்தபோது அப்பகுதியை சேர்ந்த ரேவதி (28) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நித்திஷ் என்ற 5 வயது மகன் உள்ளார்.

    இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களது திருமணத்திற்கு பெற்றோர் சம்மதிக்கவில்லையாம். இதனால் இருவரும் திருப்பூருக்கு சென்று அங்கு திருமணம் செய்து கொண்டு அங்கேயே தங்கி சென்டரீங் வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் இளஞ்செழியனின் நண்பரான அம்மாபேட்டை அருகே அரித்து வாரமங்கலம் பகுதியை சேர்ந்த இளங்கோவன் மகன் இளவழகன் (24), அடிக்கடி திருப்பூருக்கு வந்து இளஞ்செழியனை சந்தித்து செல்வாராம். இதில் இளவழகனுக்கும் ரேவதிக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கணவன் -மனைவி இடையே அடிக்கடி கருத்துவேறுபாடு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கணவன்- மனைவி இருவரும் தஞ்சாவூருக்கு செல்வது என்று முடிவு எடுத்தனர். அதன்படி தஞ்சாவூர் வெட்டுக்காரத்தெருவில் வாடகை வீடு எடுத்து தங்கி இளஞ்செழியன் வேலைக்கு சென்று வந்துள்ளார்.

    இந்நிலையில் மீண்டும் ரேவதி, இளவழகன் இடையே தஞ்சையிலும் கள்ளத் தொடர்பு தொடர்வதை அறிந்த இளஞ்செழியன் கோவித்து கொண்டு மதுரைக்கு தனது தாயாருடன் சென்று தங்கி விட்டதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த 13.1.2018-ல் இளஞ்செழியனை போனில் தொடர்பு கொண்ட ரேவதி பொங்கல் பண்டிகைக்கு தஞ்சாவூருக்கு வாருங்கள் மீண்டும் சேர்ந்து வாழ்வோம் என்று அழைத்தன் பேரில் அவர் தஞ்சைக்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் மனைவி ரேவதி நண்பன் இளவழகன், இவருடைய நண்பரான திருவாரூர் மாவட்டம் கொட்டப்படுகை கிராமம் கொத்தூர் மேலக்குடியான தெருவை சேர்ந்த கலியபெருமாள் (21) ஆகியோர் இருந்துள்ளனர்.

    பின்னர் இளஞ்செழியன், இளவழகன், கலியபெருமாள் 3 பேரும் சேர்ந்து மது அருந்தி உள்ளனர். அப்போது மதுபோதையில் இருந்த இளஞ்செழியனை ரேவதி, இளவழகன், கலியபெருமாள் ஆகிய 3 பேரும் சேர்ந்த துண்டால் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளனர். பின்னர் இளஞ்செழியனின் உடலை ஒரு சாக்குமூட்டையில் கட்டி கந்தர்வக்கோட்டை அருகே பருத்திவிடுதி கிராமம் பழனி நகரை சேர்ந்த மணி (33) என்பவரது ஆட்டோவில் ஏற்றி தஞ்சை மாவட்டம் வல்லம் அருகே உள்ள ஏழுப்பட்டி கிராமத்திற்கு எடுத்து சென்றுள்ளனர்.

    அங்குள்ள வாய்க்கால் செல்லும் பாதையில் சாலையில் கீழே உள்ள கழிவுநீர் குழாயின் உள்ளே பிணத்தை சாக்கு மூட்டையுடன் திணித்து விட்டு வந்து விட்டனர்.

    இந்நிலையில் இளஞ்செழியனின் தாய் தங்கம்மாள் (47) தனது மகனை காணவில்லை என்று அம்மாபேட்டை போலீசில் கடந்தாண்டு புகார் செய்துள்ளார். ஆனால் இதுபற்றி போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை கூறப்படுகிறது. இதையடுத்து அவர் தனது மகனை மீட்டு தரும்படி மதுரை ஐகோர்ட்டில் ஒரு ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். இதன்பேரில் கோர்ட்டு உத்தரவையடுத்து அம்மாபேட்டை போலீஸ் நிலையத்திற்கு வந்து கடந்த 26-ந்தேதி புகார் செய்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

    பின்னர் இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் ரேவதியை அழைத்து விசாரணை நடத்தினர். அவரிடம் ஏன் கணவரை காணவில்லை என ஒரு வருடமாக எந்த புகாரும் கொடுக்க வில்லை என்று விசாரித்த போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளார்.

    பின்னர் அவர் கொடுத்த தகவலின் பேரில் கலியபெருமாளை அழைத்து தீவிர விசாரணை நடத்தியபோது ரேவதி, இளவழகன், கலியபெருமாள் ஆகிய 3 பேரும் சேர்ந்து இளஞ்செழியனை கொலை செய்ததும், பின்னர் உடலை மணி ஆட்டோவில் ஏற்றி ஏழுப்பட்டியில் வாய்க்கால் சிமெண்ட் கழிவுநீர் குழாயில் திணித்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 3 பேரையும் நேற்று நள்ளிரவு வல்லம் ஏழுப்பட்டிக்கு அழைத்து சென்று அவர்கள் காட்டிய இடத்தில் சாக்குமூட்டையில் இருந்த இளஞ்செழியனின் எலும்பு கூட்டை கைப்பற்றினர்.

    இதையடுத்து அம்மாபேட்டை போலீசார் ரேவதி, இளவழகன், கலியபெருமாள், ஆட்டோ டிரைவர் மணி ஆகிய 4 பேரை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கள்ளக்காதலனுடன் சேர்ந்து காதல் கணவனை கழுத்தை நெரித்து கொலை செய்து உடலை கழிவுநீர் குழாயில் மறைத்த சம்பவம் ஒருவருடத்திற்கு பிறகு தெரியவந்ததால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×