search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாழப்பாடி அருகே 54 வயது ஆசிரியரை திருமணம் செய்த 19 வயது இளம்பெண் தற்கொலை
    X

    வாழப்பாடி அருகே 54 வயது ஆசிரியரை திருமணம் செய்த 19 வயது இளம்பெண் தற்கொலை

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே 54 வயது ஆசிரியரை திருமணம் செய்த 19 வயது இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி பேரூராட்சி ஆத்துமேடு பகுதியை சேர்ந்தவர் மதுரை வீரன். கூலி தொழிலாளி. இவரது மகள் காயத்ரி (வயது 19).

    ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த காயத்ரி 10-ம் வகுப்பு வரை படித்து விட்டு மேற்கொண்டு படிக்க வசதியில்லாததால் பெற்றோருக்கு உதவியாக இருந்து வந்தார்.

    இவரை நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அரசுப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வரும் வாழப்பாடியை அடுத்த பழனியாபுரம் காலனி கிராமத்தை சேர்ந்த துரைசாமி (54) என்பவர் கடந்த 1½ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

    நேற்று காலை பழனியாபுரத்தில் உள்ள கணவர் துரைசாமி வீட்டில் காய்த்ரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    மகள் தற்கொலையால் அதிர்ச்சி அடைந்த அவரது தாய் வசந்தி வாழப்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    காயத்ரிக்கு திருமணம் ஆகி 1½ வருடமே ஆவதால் வாழப்பாடி கோட்டாட்சியர் செழியன், டி.எஸ்.பி. சூர்யமூர்த்தி ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இது பற்றி வாழப்பாடி போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது:-

    18 வயது நிறைவடைவதற்கு முன்பாக காயத்ரியை, ஆசிரியர் துரைசாமி திருமணம் செய்து கொண்டுள்ளார். தன்னைவிட வயது அதிகமானவர் என்பதை தெரிந்தும் ஆசிரியருக்கு திருமணம் செய்து கொடுத்து விட்டார்களே என நினைத்து காயத்ரி மனவருத்தம் அடைந்ததாக தெரிகிறது. இதை வெளியே சொல்லி அவர் அழுது புலம்பி உள்ளார். ஊரில் உள்ளவர்களும் காயத்ரியை வயது அதிகமான நபருக்கு திருமணம் செய்து கொடுத்து விட்டீர்களே? அந்த பெண் எவ்வளவு மன கஷ்டப்படுவார் என கூறி பெற்றோரை சத்தம் போட்டனர்.

    இந்த நிலையில் காயத்ரியின் தோழிகள் மற்றும் உறவினர்கள் சிலர், வயது அதிகம் உள்ளவரை திருமணம் செய்து கொண்டு உள்ளாயே என சொல்லி கேலி, கிண்டல் செய்துள்ளதாக தெரிகிறது.

    இதனால் அவர் மேலும் மனம் உடைந்தார். இதை அவர் வெளியே சொல்லாமல் மனதிற்குள்ளே வைத்து குமுறி, குமுறி அழுதுள்ளார்.

    திருமணத்திற்கு பிறகு காயத்ரியின் முகத்தில் மகிழ்ச்சியில்லை. ஊருக்கு வரும்போதெல்லாம் சோகத்துடன் இருப்பார். பெற்றோர் அவருக்கு ஆறுதல் சொல்லி கணவருடன் அனுப்பி வைத்து வந்தனர்.

    கடந்த 1½ ஆண்டுகளாக ஆசிரியருடன் வாழ்க்கையை நடத்தி வந்த அவர், அதற்கு மேல் வாழ்க்கையை நடத்த விரும்பவில்லை. உயிரை மாய்த்துக் கொள்ள முடிவு செய்தார். அதன்படி நேற்று வீட்டில் காயத்ரி தூக்குப் போட்டு தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.

    இவ்வாறு போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இந்த சம்பவம் வாழப்பாடி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×