search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிராமசபை கூட்டங்கள் நடக்காமல் ஆளுங்கட்சி தடுக்கிறது - திருநாவுக்கரசர் குற்றச்சாட்டு
    X

    கிராமசபை கூட்டங்கள் நடக்காமல் ஆளுங்கட்சி தடுக்கிறது - திருநாவுக்கரசர் குற்றச்சாட்டு

    கிராமசபை கூட்டங்கள் நடக்காமல் ஆளுங்கட்சி தடுக்கிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் குற்றச்சாட்டியுள்ளார். #Congress #Thirunavukkarasar

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மத்திய-மாநில அரசுகளுக்கு இணையாக மக்களுக்கே அதிகாரம் அளிக்கும் வகையில் அமரர் ராஜீவ்காந்தி கண்ட கனவிற்கேற்ப 73-வது சட்டத் திருத்தத்தின்படி பஞ்சாயத்து ராஜ் மசோதா நிறை வேற்றப்பட்டு 1993-ம் ஆண்டு சட்டமாக்கப்பட்டு, 25 ஆண்டுகள் முடிவுற்ற போதிலும், தமிழகத்தில் தற்போது பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் எப்படி செயல்படுகின்றன என்பதை ஆய்வு செய்தால் கடும் அதிர்ச்சிதான் ஏற்படுகிறது.

    தமிழகத்தில் கிராம சபைகளை செயல்படவிடாமல் ஆளுங்கட்சியினர் தடுத்து வருகின்றனர். மக்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான அடிப்படை வசதிகள்கூட செய்து தரப்படாமல் அ.தி.மு.க. அரசு மக்களை வஞ்சித்து வருகிறது.

    நாளை (26-ந்தேதி) குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம சபைக் கூட்டங்கள் நடத்துவது சட்டத்தின்படி கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

    ஆகவே, மாவட்டத் தலைவர்கள் தங்கள் பகுதிகளுக்குட்பட்ட கிராம பஞ்சாயத்துகளில் நாளைய தினத்தன்று கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அறிவுறுத்த வேண்டும்.

    நாளை காலை 8 மணி முதல் 12 மணி வரை தமிழகம் முழுவதும் நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் முன்னணித் தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர்கள், மாநில நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், முன்னாள், இந்நாள் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், பிரிவுகளின் மாநிலத் தலைவர்கள், மாவட்டத் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள், மாநில பொதுக் குழு உறுப்பினர்கள், ஆகியோர் தங்கள் பகுதிகளுக்குட்பட்ட கிராம பஞ்சாயத்து சபைக் கூட்டங்களில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார். #Congress #Thirunavukkarasar

    Next Story
    ×