search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொடநாடு விவகாரம்- திமுக போராட்டம் தொடரும்: முக ஸ்டாலின்
    X

    கொடநாடு விவகாரம்- திமுக போராட்டம் தொடரும்: முக ஸ்டாலின்

    கொடநாடு விவகாரம் தொடர்பாக தி.மு.க.வின் போராட்டம் தொடரும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். #KodanadEstate #DMK #MKStalin
    சென்னை:

    கொடநாடு விவகாரம் குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி கவர்னர் மாளிகை முன்பு போராட்டம் நடத்திய தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டனர். இது குறித்து மு.க.ஸ்டாலின் அறித்த பேட்டி வருமாறு:-

    கொடநாடு விவகாரத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றச்சாட்டு உள்ளது. ஆதாரங்களோடு இது தொடர்பான செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. எனவே, இந்த குற்றச்சாட்டுகள் குறித்து கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க. சார்பில் அவரிடம் நேரடியாக புகார் மனு கொடுத்தோம்.

    4 முக்கியமான கோரிக்கைகளை அடிப்படையாக கொண்டு அந்த மனு இருந்தது. இதில் ஒன்று குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கிற எடப்பாடி பழனிசாமியை உடனடியாக முதல்-அமைச்சர் பதவியில் இருந்து கவர்னர் நீக்க வேண்டும். அப்போதுதான் உண்மையான, முறையான விசாரணை நடைபெறும்.

    அடுத்து, கவர்னர் உடனடியாக இந்திய ஜனாதிபதியிடம் நேரடியாக இதுபற்றி விளக்கிச் சொல்லி அவர் மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மூன்றாவதாக உயர்நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் ஐ.ஜி. தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி உண்மையை வெளியே கொண்டு வர வேண்டும்.

    நான்காவதாக மர்மமான முறையில் விபத்தில் இறந்ததாக சொல்லப்படும் டிரைவர் கனகராஜ் மரணம் குறித்தும் முறையாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் தி.மு.க. சார்பில் கோரிக்கை விடுத்துள்ளோம்.

    ஆனால், இதுவரை கவர்னர் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார் என்று செய்திகள் வரவில்லை. எனவே, தி.மு.க. சார்பில் ஒரு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி இருக்கிறோம். இதில் பங்கேற்ற அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்.

    உலக முதலீட்டாளர்கள் மாநாடு என்பது போலியானது. இதற்கு முதல்- அமைச்சர் சொல்லும் பதிலை ஊடகங்கள் மக்களிடம் தெரிவிக்க வேண்டும்.

    அமைச்சர்கள், முதல்- அமைச்சர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கொடுத்தும் கவர்னர் நடவடிக்கை எடுக்கவில்லை.

    மத்திய அரசு பின்னால் இருந்து கொண்டு இவர்களுக்கு முழு ஆதரவு அளிக்கிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. என்றாலும் நாங்கள் இதை விடப்போவதில்லை. தொடர்ந்து இதுபோன்ற போராட்டங்களை தி.மு.க. நடத்தும்.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார். #DMK #MKStalin
    Next Story
    ×