search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    வண்ணாரப்பேட்டை-டி.எம்.எஸ் இடையே மெட்ரோ ரெயில் சேவை பிப்ரவரி முதல்வாரம் தொடக்கம்

    வண்ணாரப்பேட்டை- டி.எம்.எஸ். இடையேயான மெட்ரோ ரெயில் சேவையை வருகிற பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. #MetroTrain
    சென்னை:

    சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மெட்ரோ ரெயில் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் வண்ணாரப்பேட்டை-விமான நிலையம் வரை 23 கி.மீ தூரத்திற்கும், சென்ட்ரலில் இருந்து பரங்கிமலை வரை 22 கி.மீ தூரத்திற்கும் 2 வழித்தடங்களில் நிறைவேற்றப்படுகிறது.

    உயர்மட்ட பாதை மற்றும் சுரங்கப்பாதை வழியாக மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சென்ட்ரலில் இருந்து விமான நிலையம் வரையிலும், தேனாம்பேட்டை டி.எம்.எஸ்.சில் இருந்து விமான நிலையம் வரையிலும் மெட்ரோ ரெயில் சேவை நடைபெற்று வருகிறது.

    வண்ணாரப்பேட்டை- டி.எம்.எஸ். இடையே சுரங்கப்பாதையிலும் ரெயில்களை இயக்குவதற்காக கடந்த சில மாதங்களாக பணிகள் மும்முரமாக நடந்து முடிந்துள்ளன. இதன்மூலம் 45 கி.மீ தூரத்திற்கான முதல் கட்ட மெட்ரோ பணிகள் முடிவடைந்தன.

    அதைத்தொடர்ந்து வண்ணாரப்பேட்டை- டி.எம்.எஸ். இடையேயான மெட்ரோ ரெயில் சேவையை வருகிற பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    முதலில் வருகிற 30-ந்தேதி போக்குவரத்து தொடங்க திட்டமிடப்பட்டது. ஆனால் பாராளுமன்ற கூட்டம் நடைபெறுவதால் மத்திய நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகத்தின் வசதிக்கேற்ப தொடக்கவிழா தள்ளி வைக்கப்பட்டது. அனேகமாக பிப்ரவரி 6 அல்லது 10-ந்தேதி வண்ணாரப்பேட்டை - டி.எம்.எஸ். இடையேயான மெட்ரோ ரெயில் சேவை தொடங்க பரிசீலிக்கப்பட்டுள்ளது.

    அதற்கான விழா சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தொடங்கி விட்டன. மத்திய வீடு மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை மந்திரி ஹர்தீப்சிங்பூரி, முதல்-மந்திரி எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ரெயில் போக்குவரத்தை தொடங்கி வைக்கின்றனர்.

    இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்துகொள்ள இருப்பதாக வதந்திகள் பரவின. ஆனால் அவர் தற்போது இதில் பங்கேற்க மாட்டார் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

    வண்ணாரப்பேட்டை- டி.எம்.எஸ். இடையே 10 கி.மீ தூரத்துக்கான சோதனை ஓட்டம் சமீபத்தில் நடந்தது. மெட்ரோ ரெயில் பாதுகாப்பு கமி‌ஷனர் மனோகரன் தலைமையிலான அதிகாரிகள் மெட்ரோ ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம் பார்த்தனர். அப்போது ரெயில் நிலையங்கள் மற்றும் சுரங்கப்பாதைகள் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

    நாளை மறுநாள் (25-ந்தேதி) மீண்டும் சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளது. அதில் திருப்தி ஏற்பட்டால் இறுதி முடிவு எடுக்கப்பட்டு சில நாட்களில் ரெயிலை இயக்க அனுமதி சான்றிதழ் வழங்கப்படும். இந்த மார்க்கத்தில் ரெயில்சேவை தொடங்கும் பட்சத்தில் முதல்கட்ட பணி நிறைவேறி 45 கி.மீ தூரத்துக்கு மெட்ரோ சேவை முழுமை அடையும். #MetroTrain
    Next Story
    ×