search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊத்தங்கரை ரவுண்டானா இடிப்பு- 7 நாட்களுக்கு பிறகு பெருமாள் சிலை லாரியுடன் புறப்பட்டது
    X

    ஊத்தங்கரை ரவுண்டானா இடிப்பு- 7 நாட்களுக்கு பிறகு பெருமாள் சிலை லாரியுடன் புறப்பட்டது

    ஒரே கல்லால் ஆன 380 டன் எடை கொண்ட பிரமாண்ட பெருமாள் சிலையைக் கொண்டு செல்வதற்காக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை பகுதியிலுள்ள ரவுண்டான இடிக்கப்பட்டது.
    ஊத்தங்கரை:

    கர்நாடக மாநிலம், பெங்களூரு, தெற்கு ஈஜிபுரா பகுதியில், கோதண்டராம பெருமாள் கோவில் உள்ளது. 60 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த கோவிலில், மூலவர் கோதண்டராம பெருமாள், வீர ஆஞ்சநேயர், விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியர், வராகர், அய்யப்பன், அஷ்டலட்சுமி, தட்சிணாமூர்த்தி, நவக்கிரகம் உள்ளிட்ட சன்னதிகள் உள்ளன. கோதண்டராம பெருமாள் கோவிலில், ஒரே கல்லில், 64 அடி உயரத்தில், 11 முகங்கள் மற்றும் 22 கைகள் உடைய விஸ்வரூப கோதண்டராம பெருமாள் சிலை மற்றும் 7 தலை பாம்புகளுடன் ஆதிசேஷன் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டது.

    இதற்கான கல், திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த கொரக்கோட்டை கிராமத்தில் உள்ள பாறை குன்றில் இருப்பது கண்டறியப்பட்டது. கடந்த 2014-ம் ஆண்டில் கல் வெட்டும் பணி தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக, தற்போது கோதண்டராம பெருமாள் சாமி சிலை செய்ய 64 அடி உயரம், 26 அடி அகலம் கொண்ட கல்லும், ஆதிசேஷன் சிலை செய்ய 24 அடி நீளம், 30 அடி அகலம், 12 அடி உயர கல்லும் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது.

    வெட்டி எடுக்கப்பட்ட கல்லில் பெருமாளின் முகம், சங்கு சக்கர கைகள் ஆகியவை செதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பாகங்கள், பெங்களூருவில் செதுக்கப்பட உள்ளது. இதில் முதற்கட்டமாக ஒரு கல்லில் பெருமாளின் முகம், சங்கு சக்கரம், கைகள் அமைந்துள்ள 380 டன் எடையில், 64 அடி உயர விஸ்வரூப கோதண்டராம பெருமாள் சிலையை, பெங்களூருவுக்கு பெரிய லாரி மூலம் அனுப்பி வைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. கடந்த மாதம் 9-ந் தேதி, கொரக்கோட்டை கிராமத்திலுள்ள குன்றில் இருந்து, விஸ்வரூப கோதண்டராம பெருமாள் சிலை 240 டயர்களை உடைய ராட்சத லாரியில் ஏற்றப்பட்டது.

    இந்த லாரி செல்லும் வழியில் தடையாக உள்ள சில கடைகளை உடைத்து வழி ஏற்படுத்தப்பட்டது. இதனிடையே இந்த பெருமாள் சிலையுடன் லாரி கடந்த 16-ந்தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டைக்கு வந்தது. பின்னர் அந்த லாரி சிலையுடன் ஊத்தங்கரை அருகே உள்ள பாம்பாறு அணை தரைப்பாலத்தின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டது. அந்த பாலத்தை கடக்க கூடுதலாக லாரி தேவைப்படுவதால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். ஊத்தங்கரை அருகே நிறுத்தி வைக்கப்பட்ட பெருமாள் சிலையை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சென்றனர்.


    இந்த நிலையில் சிலையை கொண்டு வருவதற்காக அந்த பகுதியில் உள்ள சில கட்டிடங்கள் இடிக்கப்பட்டன. மேலும் பாம்பாறு அணை பாலம் பழுதடைந்து இருந்ததால் தற்காலிகமாக தரைப்பாலம் அமைக்கப்பட்டது. மேலும்  ஊத்தங்கரை ரவுண்டானா இடித்து அகற்றப்பட்டது. இதையடுத்து 7 நாட்களுக்கு பிறகு அந்த லாரி நேற்று ஊத்தங்கரை பாம்பாறு பாலத்தை கடந்து புறப்பட்டு சென்றது.

    அந்த லாரியில் இருந்த பெருமாள் சிலையை பக்தர்கள் வணங்கியவாறு வழி அனுப்பி வைத்தனர். அந்த லாரி ஊத்தங்கரை நகர் வழியாக நேற்று கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் சென்றது. லாரி புலியூர் கூட்டு ரோடு வழியாக கிருஷ்ணகிரி செல்ல உள்ளது. தினமும் 7 கிலோ மீட்டர் தூரம் மட்டுமே அந்த லாரியை இயக்க முடியும் என்பதால் கிருஷ்ணகிரிக்கு இன்னும் 4 நாட்களில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல கிருஷ்ணகிரியை கடந்து ஓசூர் வழியாக பெங்களூருவுக்கு இந்த மாத இறுதிக்குள் விஸ்வரூப கோதண்டராம சாமி சிலையை எடுத்து செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×