search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொடைக்கானலில் 3-வது நாளாக பற்றி எரியும் காட்டு தீ - வனத்துறையினர் தவிப்பு
    X

    கொடைக்கானலில் 3-வது நாளாக பற்றி எரியும் காட்டு தீ - வனத்துறையினர் தவிப்பு

    கொடைக்கானல் வனப்பகுதியில் 3-வது நாளாக பற்றி எரியும் காட்டுத் தீயை அணைக்க முடியாமல் வனத்துறையினர் தவித்து வருகின்றனர்.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், வாகன ஓட்டிகள் வெளியில் நடமாட முடியாமல் முடங்கிபோய் உள்ளனர்.

    இதுபோன்ற சமயங்களில் குளிர் காய்வதற்காக வனப்பகுதிகளில் தீ மூட்டும்போது அது பரவி பெரிய காட்டுத்தீயாக மாறி விடுவதுண்டு.

    எனவே வனத்துறையினர் தீ தடுப்பு கோடுகள் அமைத்து கண்காணித்து வருகின்றனர். இருந்தபோதும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொடைக்கானல் வனப்பகுதியான டைகர்சோலை குறிஞ்சிநகர், செண்பகனூர் மலை உச்சி, டால்பின் நோஸ், வட்டக்கானல் ஆகிய பகுதிகளில் காட்டு தீ ஏற்பட்டது.

    இன்று 3-வது நாளாக தீ பற்றி எரியும் நிலையில் அதனை அணைக்க முடியாமல் வனத்துறையினர் தவித்து வருகின்றனர். காட்டுத்தீ காரணமாக அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்து வருகிறது. சுமார் 8 ஏக்கர் பரப்பளவிலான இடத்தில் மரங்கள், மூலிகை செடிகள் எரிந்து வருவதால் பொது மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

    கொடைக்கானல் வனப் பகுதியில் பல அரிய வகை மரங்களும், மூலிகைகளும் உள்ளன. 3 நாட்களாக பற்றி எரியும் காட்டு தீயால் அவை அனைத்தும் எரிந்து சாம்பலாகி வருகின்றன.

    மேலும் வன விலங்குகளும் இறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுதவிர வன விலங்குகள் இடம் பெயர்ந்து குடியிருப்பு பகுதிக்குள் வரும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

    காட்டு தீ இடைவிடாமல் எரிந்து வருவதால் வனப்பகுதியையொட்டி வசிக்கும் பொதுமக்களும் இடம் பெயர்ந்து வருகின்றனர். எனவே தீ விபத்தை தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி உள்ளனர். நவீன தொழில் நுட்பங்களை கையாண்டு இதுபோன்ற விபத்துகள் நிகழ்வதை தவிர்க்கவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×