search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாளை அருகே இரட்டைக்கொலை - மகன்கள், உறவினர்கள் வெறிச்செயல்
    X

    பாளை அருகே இரட்டைக்கொலை - மகன்கள், உறவினர்கள் வெறிச்செயல்

    பாளையங்கோட்டை அருகே 2 விவசாயிகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மகன்கள், உறவினர்கள் உள்ளிட்ட 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். #NellaiDoubleMurder
    நெல்லை:

    பாளை அருகே உள்ள முன்னீர்பள்ளத்தை அடுத்த கீழசெவல் நயினார்குளம் கிராமத்தை சேர்ந்தவர் செல்லக்குட்டி(வயது47). விவசாயி. இவரது மனைவி செல்வி (40). இவர்களுக்கு அம்மையப்பன் என்ற ஐயப்பன் (22), மகாராஜன் (20) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர்.

    செல்லக்குட்டியும், அவரது மனைவி செல்வியும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 7 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கிறார்கள். செல்வியுடன் அவரது இரண்டு மகன்களும் வசித்து வந்தனர். கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து வாழ பெரியவர்கள் பலமுறை முயற்சி எடுத்தனர். ஆனால் அதற்கு பலன் இல்லை.

    செல்லக்குட்டி தனது நண்பரான அதே பகுதியை சேர்ந்த மற்றொரு விவசாயி வேல்சாமி (40) என்பவருடன் சேர்ந்து தினமும் மது குடித்து வந்தார். இதனால் செல்லக்குட்டி மனைவி செல்வியுடன் சேர்ந்து வாழாததற்கு வேல்சாமி தான் காரணம் என்று அவரது மகன்களும், உறவினர்களும் நினைத்தனர்.

    ஆகவே அவர்கள் மது குடிப்பதை கைவிட வேல்சாமியிடமும், செல்லக்குட்டியிடமும் வலியுறுத்தினர். ஆனால் செல்லக்குட்டி மனைவியுடன் சேர்ந்து வாழாமல் நண்பருடன் சேர்ந்து தொடர்ந்து மது குடித்து வந்தார். இது செல்லக்குட்டியின் மகன்களுக்கும், அவர்களது உறவினர்களுக்கும் கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

    அவர்கள் செல்லக்குட்டி மற்றும் அவரது நண்பர் வேல்சாமி ஆகிய இருவரையும் வெட்டிக்கொல்ல முடிவு செய்தனர். நேற்றிரவு செல்லக்குட்டியும், வேல்சாமியும் மது குடிப்பதற்காக வழக்கம் போல் ஊருக்கு வெளியே உள்ள காட்டுப் பகுதிக்கு சென்றனர்.

    இதையறிந்த செல்லக்குட்டியின் மகன்கள் அம்மையப்பன் என்ற ஐயப்பன், மகாராஜன், அவர்களது மாமா ஹரிராமன், அவரது மகன்கள் ரமேஷ், மணி மற்றும் உறவினர் மாரியப்பன் உள்பட 8 பேர் அரிவாள், கம்பு, கத்தியுடன் செல்லக்குட்டியை தேடி காட்டு பகுதிக்கு சென்றனர்.

    ஆயுதங்களுடன் வந்த அவர்களை பார்த்ததும் செல்லக்குட்டியும், வேல்சாமியும் உயிர் பிழைக்க தப்பி ஓடினர். ஆனால் அவர்கள், செல்லக்குட்டி மற்றும் வேல்சாமியை ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டினர். இதில் செல்லக்குட்டி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பிணமானார்.

    வேல்சாமி படுகாயத்துடன் சாலை அருகே ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். இதனால் 2 பேரும் இறந்து விட்டார்கள் என நினைத்து தாக்குதலில் ஈடுபட்ட அனைவரும் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். செல்லக்குட்டி மற்றும் வேல்சாமி வெட்டப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் நள்ளிரவில் பரவியது.

    இதுகுறித்து சிலர் முன்னீர்பள்ளம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் உத்தரவின் பேரில் உதவி கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத், முன்னீர்பள்ளம் இன்ஸ்பெக்டர் மாரி யப்பன் மற்றும் போலீசார் விரைந்து சென்று தேடுதல் வேட்டை நடத்தினார்கள்.

    அப்போது வேல்சாமி படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருப்பது தெரியவந்தது. அவரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரது உடல்நிலை மோசமானதால் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    இந்த நிலையில் செல்லக்குட்டியை இரவு முழுவதும் போலீசார் தேடினார்கள். அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இன்று காலை போலீசார் மீண்டும் அந்த காட்டு பகுதியில் தீவிரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது செல்லக்குட்டி அந்த பகுதியில் உள்ள ஒரு புதர் பகுதியில் வெட்டு காயங்களுடன் பிணமாக கிடந்தார். உடனடியாக போலீசார் அவரது உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

    இந்த நிலையில் மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த வேல்சாமியும் இன்று காலை சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதனால் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

    கீழசெவல் பகுதியில் ஒரே நாளில் 2 விவசாயிகள் வெட்டிக்கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கொலையாளிகளை கைது செய்ய 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    தனிப்படை போலீசார் இரட்டை கொலை குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இரட்டை கொலை தொடர்பாக செல்லக்குட்டியின் மகன்கள், உறவினர்கள் உள்ளிட்ட 8 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #NellaiDoubleMurder

    Next Story
    ×