search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தந்தை-மகனை தாக்கி சித்ரவதை: போலீஸ் அதிகாரிகளுக்கு ரூ.4 லட்சம் அபராதம் - மனித உரிமை ஆணையம் உத்தரவு
    X

    தந்தை-மகனை தாக்கி சித்ரவதை: போலீஸ் அதிகாரிகளுக்கு ரூ.4 லட்சம் அபராதம் - மனித உரிமை ஆணையம் உத்தரவு

    தந்தை மற்றும் மகனை தாக்கி சித்ரவதை செய்த போலீஸ் அதிகாரிகளுக்கு ரூ.4 லட்சம் அபராதம் விதித்து மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை ஜார்ஜ் டவுனில் உள்ள பிரபல ஓட்டலில் மேலாளராக பணியாற்றியவர் ரவி. இவரது மனைவி அம்பிகா.

    கடந்த 2012-ம் ஆண்டு ஜனவரி 24-ந்தேதி அம்பிகா கொலை செய்யப்பட்டார். இவர் போரூரில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கியில் நடந்த மோசடிகள் குறித்து புகார் செய்து வந்தார். இந்த நிலையில்தான் அவர் மகன் கண்முன்னே போலீஸ் உடையில் வந்த 2 பேரால் கொலை செய்யப்பட்டார்.

    இதுதொடர்பாக ரவி, அவரது மகனை மாங்காடு போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது போலீசார் தன்னையும், மகனையும் தாக்கி சித்ரவதை செய்ததாக மாநில மனித உரிமை ஆணையத்தில் ரவி புகார் அளித்தார்.

    அதில் எனது மனைவி கொலை தொடர்பாக என்னையும், மகனையும் மாங்காடு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது எங்களை சட்ட விரோதமாக அடைத்து வைத்தனர்.

    பின்னர் எங்களை தாக்கி சித்ரவதை செய்து குற்றத்தை ஒப்புக்கொள்ளும்படி மிரட்டினர். 2012-ம் ஆண்டு ஜனவரி 25-ந்தேதி முதல் பிப்ரவரி 4-ந்தேதி வரை போலீஸ் நிலையத்தில் வைத்து தொடர்ந்து சித்ரவதை செய்தனர். அதன்பின் எனது உறவினர்கள் கேட்டுக் கொண்டதால் பிப்ரவரி 7-ந்தேதி விடுவித்தனர்.

    எனவே இதில் சம்பந்தப்பட்ட சங்கர்நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதிமூலம், சைதாப்பேட்டை உதவி கமி‌ஷனர் அழகு, மாங்காடு சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ண குமார், லாரன்ஸ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

    இந்த குற்றச்சாட்டு போலீஸ் தரப்பில் மறுக்கப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி டி.ஜெயசந்திரன் அளித்த தீர்ப்பில் சாட்சியம் ஆவணங்களை வைத்து பார்க்கும்போது 4 போலீஸ் அதிகாரிகள் மனித உரிமை மீறலில் ஈடுபட்டிருப்பது தெரிகிறது.

    இதனால் அவர்கள் 4 பேருக்கு தலா ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. இதில் ரூ.3 லட்சத்தை ரவிக்கும், ரூ.1 லட்சத்தை அவரது மகனுக்கும் தமிழக அரசு 4 வாரத்திற்குள் வழங்க வேண்டும்.

    இந்த தொகையை போலீஸ் அதிகாரிகள் சம்பளத்தில் பிடித்தம் செய்து கொள்ளலாம். மேலும் போலீஸ் அதிகாரிகள் 4 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கையும், குற்ற நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    Next Story
    ×