search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவை அருகே தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை
    X

    கோவை அருகே தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை

    கோவை அருகே தாய், மனைவி மற்றும் குழந்தைகளை கொன்று விட்டு அரசு பள்ளி ஆசிரியர் தற்கொலை செய்து கொண்டார்.
    கோவை:

    கோவை அருகே தாய், மனைவி மற்றும் குழந்தைகளை கொன்று விட்டு அரசு பள்ளி ஆசிரியர் தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

    கோவையை அடுத்த கருமத்தம்பட்டி அமலி நகரை சேர்ந்தவர் அந்தோணி ஆரோக்கியதாஸ் (வயது 38). இவர் திருப்பூர் மாவட்டம் கூலிபாளையத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 6 மாதமாக அமலி நகரில் வாடகை வீட்டில் மனைவி ஷோபனா (30), மகன் ரித்திக் மைக்கேல் (7), மகள் ரியா ஏஞ்சலின் (1) மற்றும் தாயார் புவனேஸ்வரி (65) ஆகியோருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை அவரது வீடு உள்பக்கமாக பூட்டிக்கிடந்தது. இதை கண்டு சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் கதவை தட்டி பார்த்தனர். பதில் இல்லை.

    உடனே இதுகுறித்து கருமத்தம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு வீட்டு கதவை உடைத்து பார்த்தபோது உள்ளே அந்தோணி ஆரோக்கியதாஸ் தூக்கில் பிணமாக தொங்கிக்கொண்டிருந்தார். வேறு அறையில் மற்ற 4 பேரும் பிணமாக கிடந்தனர். அவர்கள் உடலில் காயங்கள் இல்லை.

    இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். இதில் பின்வரும் தகவல்கள் வெளியாயின.

    தற்கொலை செய்துகொண்ட அந்தோணி ஆரோக்கியதாசுக்கு கடந்த 12 ஆண்டுகளாக முதுகு வலி இருந்து வந்தது. இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் குணமாகவில்லை. இதனால் மனம் உடைந்த அவர் மனைவி, குழந்தைகள் மற்றும் தாயாருக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    ஷோபனா, மகன் ரித்திக் மைக்கேல், மகள் ரியா ஏஞ்சலின் ஆகியோர் ஒரு படுக்கை அறையிலும், தாயார் புவனேஸ்வரி மற்றொரு படுக்கை அறையிலும் பிணமாக கிடந்தனர். அந்தோணி ஆரோக்கியதாஸ் மனைவி, குழந்தைகள் இருந்த படுக்கை அறையில் தூக்கில் தொங்கியபடி காணப்பட்டார். இதன்மூலம் குடும்பத்தினரை அந்தோணி ஆரோக்கியதாஸ் ஏற்கனவே கொன்று விட்டு அவர்களை தூக்கி வந்து படுக்கையில் போட்டு விட்டு அதன்பின்னர் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றுதெரிகிறது. நேற்று மதியம் அனைவரும் சாப்பிடும் போது குடும்பத்தினருக்கு தெரியாமல் அந்தோணி ஆரோக்கியதாஸ் உணவில் விஷம் கலந்திருக்கலாம் என்றும், அதை சாப்பிட்ட அவர்கள் இறந்த பின்னர் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக அந்தோணி ஆரோக்கியதாஸ் கடிதம் எழுதி வைத்துள்ளார். அதில் தனக்கு பல ஆண்டுகளாக முதுகுவலி இருந்துள்ளது என்றும், இதனால் மனம் வெறுப்படைந்து இந்த முடிவை தேடிக்கொண்டுள்ளதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார். இது உண்மையா? அல்லது வேறு காரணமா? என்பது குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அரசு பள்ளி ஆசிரியர் தனது குடும்பத்தினரை கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×