search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ‘ஸ்மார்ட்சிட்டி’ பணிகளுக்கான பூமிபூஜையில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
    X
    ‘ஸ்மார்ட்சிட்டி’ பணிகளுக்கான பூமிபூஜையில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

    மதுரையில் ரூ.354 கோடி மதிப்பில் ஸ்மார்ட்சிட்டி திட்டப்பணிகள் - துணை முதல்வர் அடிக்கல் நாட்டினார்

    மதுரையில் ரூ.354 கோடி மதிப்பிலான ‘ஸ்மார்ட்சிட்டி’ திட்டப்பணிகளுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டி சிறப்புரையாற்றினார். #SmartCity #MaduraiSmartCity
    மதுரை:

    ரூ.345 கோடி மதிப்பிலான திட்டத்தின் மூலம் மதுரை நகரம் சீர்மிகு நகரமாக மாற்றப்படுகிறது.

    மத்திய அரசின் ‘ஸ்மார்ட்சிட்டி’ திட்டத்தின் கீழ் மதுரையில் ரூ.1000 கோடி மதிப்பில் நகர் நவீன மயமாக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. முதல் கட்டமாக ரூ.345 கோடி செலவில் மதுரையை சீர்மிகு நகரமாக மாற்ற மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.

    இந்த நிதியில் இருந்து ரூ.160 கோடி செலவில் மிக பழமையான பெரியார் மற்றும் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பஸ் நிலையங்கள் இணைக்கப்பட்டு நவீனமயமாக்கப்படுகிறது. மேலும் ரூ.81 கோடி செலவில் ராஜா மில் சாலை முதல் குருவிக்காரன்சாலை வரையுள்ள வைகை ஆற்றங்கரை புனரமைப்பு செய்யப்படுகிறது.

    ரூ.40 கோடி செலவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள பழைய சென்ட்ரல் மார்க்கெட் பகுதியில் நவீன வாகனங்கள் நிறுத்தும் இடம், புராதன அங்காடி மையம் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கான தகவல் மையம் அமைக்கப்படுகிறது.


    ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் பெரியார் பஸ் நிலையத்தின் மாதிரி தோற்றம்

    ரூ.2½ கோடியில் பெரியார் பஸ் நிலையம் அருகில் சுற்றுலா பயணிகளுக்கு தகவல் மையம், ரூ.22 கோடி செலவில் புராதன சின்னங்களை இணைக்கும் புராதன வழித்தடம், ரூ.4 கோடி மதிப்பில் ஜான்சிராணி பூங்கா அருகே சுற்றுலா பயணிகளுக்கான வருகை மையம் மற்றும் அங்காடி மையம்.

    ரூ.8 கோடி செலவில் குன்னத்தூர் சத்திரத்தில் வணிக வளாகம் அமைத்தல், ரூ.15 கோடி செலவில் மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி உள்ள பகுதிகள் சீரமைப்பு, ரூ.12 கோடி செலவில் திருமலைநாயக்கர் மகாலை சுற்றி உள்ள பகுதிகள் மேம்படுத்தல் ஆகிய பணிகள் முதல் கட்டமாக செய்யப்பட உள்ளன.

    இந்த திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா பெரியார் பஸ் நிலைய பகுதியில் இன்று காலை நடைபெற்றது. விழாவுக்கு நகராட்சி நிர்வாக ஆணையாளர் பிரகாஷ் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் நடராஜன் வரவேற்று பேசினார். துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ‘ஸ்மார்ட்சிட்டி’ பணிக்கான அடிக்கல்லை நாட்டி சிறப்புரையாற்றினார்.

    அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோரும் ‘ஸ்மார்ட்சிட்டி’ திட்டத்தின் சிறப்பு அம்சங்கள் குறித்து பேசினர். மாநகராட்சி கமி‌ஷனர் அனீஷ்சேகர் நன்றி கூறினார்.

    இந்த ‘ஸ்மார்ட்சிட்டி’ திட்டப்பணிகள் தொடங்குவதையொட்டி பெரியார் பஸ் நிலைய பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் காலி செய்யப்பட்டு வருகிறது. பஸ் நிலையத்தை இன்னும் ஓரிரு நாளில் மூடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    தற்காலிகமாக பஸ் நிலையங்கள் அமைப்பது குறித்து வருகிற 21-ந்தேதி மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம், போக்குவரத்துத்துறை, காவல்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

    இந்த கூட்டத்தில் தற்காலிக பஸ் நிலையம் அமைப்பது, போக்குவரத்தை மாற்றி அமைப்பது தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகின்றன. இதைத்தொடர்ந்து மதுரையின் மைய பகுதியான பெரியார் பஸ் நிலைய பகுதியில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்படுகிறது.

    ‘ஸ்மார்ட்சிட்டி’ திட்டத்தை 1½ ஆண்டுகளில் முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் மதுரை நகரில் போக்குவரத்து நெரிசலுக்கு விடிவுகாலம் ஏற்பட்டுவிடும் என்பது பொதுமக்களின் கருத்தாகும்.  #SmartCity #MaduraiSmartCity
    Next Story
    ×