search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வண்ணாரப்பேட்டை-டி.எம்.எஸ். இடையே மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம்
    X

    வண்ணாரப்பேட்டை-டி.எம்.எஸ். இடையே மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம்

    டி.எம்.எஸ்.- வண்ணாரப்பேட்டை இடையேயான 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் இன்றும், நாளையும் நடைபெறுகிறது.

    சென்னை:

    சென்னை பெருநகரத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் பெருக்கத்தினாலும் வாகனங்களின் எண்ணிக்கையினாலும் போக்குவரத்து நெரிசல் என்பது மக்களின் இயல்பு வாழ்க்கையோடு ஒன்றிணைந்து விட்டது.

    75 லட்சம் மக்கள் தொகை கொண்ட சென்னை மாநகராட்சியின் எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து அடிப்படையான கட்டமைப்பு பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

    சென்னையின் போக்கு வரத்து நெரிசலுக்கு தீர்வு காண போலீசார் பல்வேறு முயற்சிகள் எடுத்தாலும் கூட அதற்கு இன்னும் முழுமையான பலன் கிடைக்கவில்லை. வாகனங்களின் அதிகரிப்பு, குறுகலான சாலைகளும் நெரிசலுக்கு முக்கிய காரணமாக இருப்பதால் எதிர்காலத்தில் மக்கள் தொகை, வாகன பெருக்கம் ஆகியவற்றை ஆராய்ந்து மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

    இத்திட்டம் வண்ணாரப்பேட்டையில் இருந்து விமான நிலையம் வரை 23 கிலோ மீட்டர் தூரத்திற்கும் சென்ட்ரலில் இருந்து பரங்கிமலை வரை 22 கிலோ மீட்டர் தூரத்திற்கும் 2 வழித் தடங்களில் நிறைவேற்றப்படுகிறது.

    உயர்மட்ட பாதை மற்றும் சுரங்கப்பாதை வழியாக மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இரண்டு பாதையிலும் 34 ரெயில் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே அதிக தூரம் சுரங்கப்பாதையில் மெட்ரோ ரெயில் ஓடக் கூடிய நகரமாக சென்னை அமைந்துள்ளது.

    இத்திட்டம் 2008-ம் ஆண்டு ரூ.16 ஆயிரம் கோடியில் ஆரம்பத்தில் தொடங்கப்பட்டது. முதல் கட்டமாக உயர் மட்ட பாதையில் மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டன.

    அதனைத் தொடர்ந்து சுரங்கப்பாதையில் மெட்ரோ ரெயில் படிப்படியாக ஓடத் தொடங்கின. தற்போது சென்ட்ரலில் இருந்து விமான நிலையம் வரையிலும், தேனாம்பேட்டை டி.எம்.எஸ்.சில் இருந்து விமான நிலையம் வரையிலும் மெட்ரோ சேவை செயல்படுத்தப்படுகிறது.

    வண்ணாரப்பேட்டை- டி.எம்.எஸ். இடையே சுரங்கப்பாதையில் ரெயில்களை இயக்குவதற்காக பணிகள் கடந்த சில மாதங்களாக மும்முரமாக நடந்தன. டிசம்பர்மாத இறுதியில் இந்த சேவை தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சில தொழில்நுட்ப இயந்திரங்கள் வெளிநாட்டில் இருந்து வருவது தாமதம் ஆனதால் தள்ளிப்போனது.

    டி.எம்.எஸ்.- வண்ணாரப்பேட்டை இடையேயான 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு சோதனை ஓட்டம் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. மெட்ரோ ரெயில் பாதுகாப்பு கமி‌ஷனர் மனோகரன் தலைமையிலான அதிகாரிகள் மெட்ரோ ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம் பார்த்தனர்.

    பயணிகளின் பாதுகாப்பு, அம்சங்கள் குறித்து அவர் ஆய்வு செய்து அதில் குறைகள் எதுவும் இருக்கிறதா என்பதை சோதனை செய்தார். ரெயில் நிலையங்களில் உள்ள வசதிகளையும் ஆய்வு செய்தார்.

    முழுமையான சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு அதன் பின்னர் கமி‌ஷனர் அறிக்கை தாக்கல் செய்வார். அதனை தொடர்ந்து வண்ணாரப்பேட்டை-டி.எம்.எஸ். இடையே சேவை தொடங்கி வைக்கப்படும்.

    இன்னும் 2 வாரத்திற்குள் இந்த வழித்தடத்தில் புதிய சேவை தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    வண்ணாரப்பேட்டை- டி.எம்.எஸ். சேவை விரைவில் தொடங்க இருப்பதால் இது வடசென்னை மக்களுக்கு மிகவும் பயன்உள்ளதாக இருக்கும் திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, ராயபுரம், வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை, எண்ணூர் போன்ற பகுதிகளை சார்ந்தவர்கள் மிக எளிதாக விமான நிலையம் சென்றடைய முடியும்.

    மெட்ரோ ரெயில் திட்டத்தின் முதல் கட்டப்பணி இவற்றுடன் நிறைவடைகிறது. இதன்மூலம் வண்ணாரப்பேட்டையில் இருந்து விமான நிலையத்திற்கு 45 நிமிடத்தில் சென்றடையலாம்.

    மெட்ரோ ரெயிலில் தினமும் வார நாட்களில் 55 ஆயிரம் பேர் பயணம் செய்கின்றனர். வார இறுதி நாட்களில் 60 ஆயிரம் பணிகள் பயணிக்கின்றனர். மெட்ரோ ரெயில் பயணத்தை அதிகரிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மெட்ரோ ரெயில் நிர்வாகம் எடுத்து வருகிறது.

    குறைந்த கட்டணத்தில் கார், ஆட்டோ வசதியினை அளித்துள்ளது. மெட்ரோ ரெயில் குறைந்த பட்ச கட்டணம் ரூ.10 ஆகவும், அதிக பட்சம் ரூ.70-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    வண்ணாரப்பேட்டையில் இருந்தும், சென்ட்ரலில் இருந்தும் விமான நிலையம் செல்ல ரூ.70 கட்டணமாகும்.

    சென்ட்ரலில் இருந்து கோயம்பேடு, ஆலந்தூர் வழியாக விமான நிலையம் (25 கி.மீ.) செல்ல 55 நிமிடம் ஆகிறது. அண்ணாசாலை வழியாக (23கி.மீ.) செல்ல 45 நிமிடத்திற்கு குறைவாக பயண நேரம் இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

    சென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் செயல்படுத்தப்படும் மெட்ரோ ரெயில் எதிர்பார்த்த அளவிற்க கூட்டம் இல்லை. மக்கள் இன்னும் அதிகளவு பயன்படுத்தவில்லை.

    வாகன நெரிசலில் சிக்கி பயணிப்பதால் குறித்த நேரத்திற்கு ஒரு இடத்திற்கு செல்ல முடியவில்லை என்ற குறை சென்னை மக்களிடம் நிலவி வருகிறது. அந்த நிலையில் இருந்து விடுபடவும், இருசக்கர மற்றும் கார்களின் பயன்பாட்டை நகருக்குள் குறைக்கவும் மெட்ரோ ரெயில் சேவை அமைந்துள்ளது.

    ஒவ்வொரு ரெயில் நிலையத்தில் இருந்தும் மாநகர பஸ் வசதி, ஆட்டோ, ஷேர் ஆட்டோ, கார் வசதியும் அளிக்கப்படுகிறது. டென்‌ஷன் இல்லாமல் சொகுசான பயணம் மேற்கொள்ள மெட்ரோ ரெயில் உதவி புரிகிறது. கட்டணம் அதிகமாக உள்ளது என்ற குற்றச்சாட்டு பொது மக்களிடம் பொதுவாக இருந்து வருகிறது.

    ஆனால் இத்திட்ட செலவு மற்றும் மற்ற நகரங்களை ஒப்பிட்டுதான் இக்கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

    முதல் கட்ட மெட்ரோ ரெயில் திட்டப்பணி நிறைவடைந்து விட்டதால் இனி பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×