search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊத்தங்கரை அருகே கல்லூரி மாணவி பலாத்காரம்- கூலித்தொழிலாளி கைது
    X

    ஊத்தங்கரை அருகே கல்லூரி மாணவி பலாத்காரம்- கூலித்தொழிலாளி கைது

    ஊத்தங்கரை அருகே கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்த கூலித்தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். வயிற்றிலேயே இறந்த குழந்தையை ஆபரேசன் மூலம் டாக்டர்கள் அகற்றினர்.

    ஊத்தங்கரை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த கல்லாவி அருகே புதூர்பூகுனை பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் ஊத்தங்கரை பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

    அந்த மாணவியின் தாயார் கணவரை பிரிந்து கோவையில் உள்ள ஒரு தனியார் நூல் மில்லில் பணியாற்றி வருகிறார்.

    மாணவி தனது தாத்தா-பாட்டியுடன் புதூர் பூகுனை பகுதியில் வசித்து வந்தார். இங்கிருந்து தான் தினமும் கல்லூரிக்கு சென்று வந்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு வயிறு பகுதி வீக்கம் அடைந்து வலியால் அவதியடைந்தார்.

    இதுகுறித்து அவரது தாத்தா கோவையில் உள்ள மாணவியின் தாயாருக்கு தகவல் கொடுத்தார். அவர் தனது மகளை ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார். அங்கு கல்லூரி மாணவியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாகவும், மாணவியின் வயிற்றில் 7 மாத குழந்தை இறந்து கிடப்பதாகவும் தெரிவித்தனர்.

    பின்னர் மாணவியை மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு ஆபரேசன் மூலம் இறந்த குழந்தையை வெளியே எடுத்தனர். மாணவியின் உயிரை காப்பாற்றி விட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து மாணவியின் தாயார் ஊத்தங்கரை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாணவியிடம் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த 3 குழந்தைகளின் தந்தையான தமிழரசன் (வயது30) கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

    இதுபற்றி மாணவி யாரிடமும் சொல்லாமல் இருந்து உள்ளார். இதனால் மாணவி கர்ப்பம் ஆனது தெரியவந்தது.

    போலீசார் கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்ததால் தமிழரசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஊத்தங்கரை கிளை சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×