search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாலமேடு, அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு - காளைகள் முட்டியதில் 92 வீரர்கள் காயம்
    X

    பாலமேடு, அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு - காளைகள் முட்டியதில் 92 வீரர்கள் காயம்

    பொங்கல் பண்டிகையையொட்டி பாலமேடு, அவனியாபுரத்தில் கோலாகலமாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. அப்போது, காளைகள் முட்டியதில் 92 வீரர்கள் காயம் அடைந்தனர். #Jallikattu #AvaniyapuramJallikattu
    மதுரை:

    தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.

    அதேபோல் இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    மதுரை மாவட்டம் பாலமேடு மஞ்சமலைசாமி கோவில் ஆற்று மைதானத்தில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நடைபெற்றது. போட்டியை காண கோவில் மைதானத்துக்கு அதிகாலை 5 மணியில் இருந்தே பார்வையாளர்கள் வந்து குவியத் தொடங்கினர். சீறிப்பாய்ந்து வரும் காளைகளை பிடிக்கும் வீரர்கள், காயம் அடையாத வகையில் மைதானத்தில் தென்னை நார் கழிவுகள் பரப்பி வைக்கப்பட்டு இருந்தன. போட்டியில் கலந்துகொள்ள வந்திருந்த காளைகளுக்கு டாக்டர்கள் மருத்துவ பரிசோதனை நடத்தினார்கள்.

    அதைத்தொடர்ந்து காலை 8 மணிக்கு போட்டியை மாவட்ட கலெக்டர் நடராஜன் கொடியசைத்து தொடங்கிவைத்தார். முதலில் வாடிவாசல் வழியாக கிராமத்து கோவில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. அவற்றை மாடுபிடி வீரர்கள் யாரும் பிடிக்கவில்லை.

    பின்னர் மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, நெல்லை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து வந்திருந்த காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்துவிடப்பட்டன. மொத்தம் 567 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. அவற்றை அடக்குவதற்காக 739 வீரர்கள் களத்தில் இறங்கினார்கள். காளைகளை அவர்கள் ஆர்வத்துடன் அடக்கினார்கள்.

    போட்டியின் போது காளைகள் முட்டியதில் வீரர்கள், காளை உரிமையாளர்கள், பார்வையாளர்கள் என மொத்தம் 48 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் படுகாயம் அடைந்த 13 பேர் சிகிச்சைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    போட்டியில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும் தங்கம், வெள்ளி நாணயங்கள், பீரோ, கட்டில், மிக்சி, கிரைண்டர் போன்றவை பரிசாக வழங்கப்பட்டன.

    சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்ட மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள மலைப்பட்டியைச் சேர்ந்த பிரபு என்பவரின் காளை முதல் பரிசான காரை தட்டிச் சென்றது.

    சிறந்த மாடுபிடி வீரராக தேர்வு செய்யப்பட்ட அலங்காநல்லூரைச் சேர்ந்த பிரபாகரனுக்கு மோட்டார் சைக்கிள் பரிசாக வழங்கப்பட்டது. பிரபாகரன் மொத்தம் 10 காளைகளை பிடித்து இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளார்.

    மதுரை அவனியாபுரம் அய்யனார் கோவில் மைதானத்தில் பொங்கல் தினமான நேற்று முன்தினம் ஜல்லிக்கட்டு போட்டி உற்சாகமாக நடைபெற்றது. மதுரை ஐகோர்ட்டு நியமித்த, ஓய்வுபெற்ற நீதிபதி ராகவன் தலைமையிலான குழுவின் வழிகாட்டுதலின்படி அங்கு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது.

    மொத்தம் 641 காளைகள் பதிவு செய்யப்பட்டு இருந்த நிலையில், 476 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 550 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று காளைகளுடன் மல்லுக்கட்டினர். ஜல்லிக்கட்டின் போது சீறிப்பாய்ந்து வந்த மாடுகள் முட்டியதில் பார்வையாளர்கள், வீரர்கள், மாடு வளர்ப்போர் என 44 பேருக்கு காயம் ஏற்பட்டது. அதில் படுகாயம் அடைந்த 9 பேர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    பாலமேட்டிலும், அவனியாபுரத்திலும் நடந்த போட்டிகளில் காளைகள் முட்டியதில் மொத்தம் 92 பேர் காயம் அடைந்து உள்ளனர்.

    திருச்சி மாவட்டம் பெரிய சூரியூரில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள், வேடிக்கை பார்த்தவர்கள் என மொத்தம் 40 பேர் காயம் அடைந்தனர்.

    பெரிய சூரியூரில் காளைகளை அடக்குவதற்காக களத்தில் நின்ற மாடுபிடி வீரர்களுக்கு இடையே அவ்வப்போது மோதலும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. உடனே போலீசார் தலையிட்டு அவர்களை சமாதானப்படுத்தினார்கள்.

    வேலூர் மாவட்டம் அணைக்கட்டு விநாயகர் கோவில் தெருவில் காளை விடும் விழா நடைபெற்றது. அப்போது காளைகள் முட்டியதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். 10 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. #Jallikattu #AvaniyapuramJallikattu
    Next Story
    ×