search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரம்பலூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதி என்ஜினீயர் உள்பட 2 பேர் பலி
    X

    பெரம்பலூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதி என்ஜினீயர் உள்பட 2 பேர் பலி

    பெரம்பலூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் என்ஜினீயர் உள்பட 2 பேர் பலியானார்கள்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள புதுவேட்டக்குடி கிராமத்தை சேர்ந்தவர் தங்கவேல் மகன் செல்லப்பாண்டி (வயது 23). ஓட்டல் தொழிலாளியான இவர் நேற்று பொங்கல் பண்டிகையையொட்டி வேப்பூர் சென்றுவிட்டு புதுவேட்டக்குடிக்கு திரும்பிக் கொண்டு இருந்தார்.

    அதே ஊரைச்சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் ரமேஷ் (35). மெக்கானிக்கல் என்ஜினீயரான இவர் உடுமலைப்பேட்டையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அவர் பொங்கல் பண்டிகை கொண்டாட ஊருக்கு வந்திருந்தார்.

    நேற்று தனது மனைவி வெண்ணிலா மற்றும் 1 வயது குழந்தையான அஸ்வின் கார்த்திக் ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் புது வேட்டக்குடியில் இருந்து வேப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    கருங்குட்டை என்ற இடத்தில் சென்றபோது எதிரே வந்த செல்லப்பாண்டியன் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். உடனடியாக அந்த பகுதியை சேர்ந்தவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு அரியலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் அவர்கள் திருச்சி அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் நேற்று இரவு செல்லப்பாண்டியனும், இன்று காலை ரமேசும் பரிதாபமாக இறந்தனர்.

    விபத்து குறித்து குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் செல்லப்பாண்டியன் மது போதையில் இருந்ததால் வேகமாக வந்து விபத்தை ஏற்படுத்தியதாக தெரிகிறது. பொங்கல் பண்டிகை தினத்தன்று 2 பேர் விபத்தில் பலியானது அவர்களது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    Next Story
    ×