search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்சி அருகே காதலி பலாத்கார முயற்சியை தடுத்த காதலன் படுகொலை
    X

    திருச்சி அருகே காதலி பலாத்கார முயற்சியை தடுத்த காதலன் படுகொலை

    திருச்சி அருகே காதலி பலாத்கார முயற்சியை தடுத்த காதலன் படுகொலை செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.

    மண்ணச்சநல்லூர்:

    திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள சின்னக்குளம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன், வியாபாரி. இவரது மகன் தமிழ்வானன் (வயது 22). சமயபுரத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்தார்.

    இவருக்கும் லால்குடி அருகே உள்ள கோதண்ட குறிச்சியை சேர்ந்த ஒரு நர்சிங் மாணவிக்கும் நீண்ட காலமாக காதல் இருந்து வந்தது. இருவரும் அடிக்கடி தனியே சந்தித்து பேசி தங்கள் காதலை வளர்த்து வந்தனர்.

    நேற்று பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்வானன் தனது காதலியை சந்திக்க விரும்பினார். உடனே செல்போனில் தொடர்பு கொண்டு தனது விருப்பத்தை தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அந்த நர்சிங் மாணவியும் நேற்று மாலை தமிழ்வாணன் கூறிய இடத்திற்கு வந்தார்.

    இருவரும் மோட்டார்சைக்கிளில் சிறுகனூர் ரோட்டில் குமுளூர் என்ற இடத்திற்கு சென்றனர். அங்கு ஒரு காட்டுப்பகுதியில் இருவரும் தனிமையில் சந்தித்து நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தனர்.

    காதல் ஜோடி இருவரும் தனிமையில் பேசிக்கொண்டிருப்பதை அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் பார்த்துள்ளது. போதையில் இருந்த அந்த 4 பேரும் மாணவியை பலாத்காரம் செய்யும் முயற்சியில் அங்கு சென்றுள்ளனர்.

    தமிழ்வாணன் மற்றும் மாணவியிடம் யார் நீங்கள், எதற்காக நிற்கிறீர்கள்? என்று கேட்டனர். பின்னர் மாணவியிடம் அவர்கள் தவறாக நடக்க முயன்றுள்ளனர். உடனே தமிழ்வாணன் அவர்களை தடுத்து காதலியை காப்பாற்ற முயன்றார்.

    அப்போது ஆத்திரம டைந்த அந்த கும்பல் தமிழ்வாணனை தாக்கியது. அவர்களிடம் தமிழ்வாணன் போராடியுள்ளார். அப்போது கும்பலில் ஒருவன் கத்தியை எடுத்து தமிழ்வாணன் தொடை மற்றும் உடலில் குத்தினார். இதில் படுகாயமடைந்த தமிழ்வாணன் உயிருக்கு போராடினார். அதிர்ச்சியடைந்த அவரது காதலி காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என்று அலறினார்.

    அவரது அலறல் சத்தம் கேட்டு அந்த வழியாக ரோட்டில் சென்றவர்கள் ஓடி வந்தனர். இதைப்பார்த்த அந்த கும்பல் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பியது. அதன் பிறகு 108 ஆம்புலன்ஸ் மூலம் தமிழ்வாணனை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து சிறுகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தமிழ்வாணனின் காதலியிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகிறார்கள். மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேரின் அங்க அடையாளங்கள், பைக் நம்பர் அடையாளம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் முக்கிய தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது. அதன்படி 4 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.

    சம்பவம் நடந்த இடம் லால்குடி-சிறுகனூர் குறுக்கு வழி சாலை பகுதியாகும். நேற்று மாலை அங்கு சென்ற காதல் ஜோடி இரவு 7:30 மணி வரை பேசிக்கொண்டிருந்துள்ளனர். அப்போது தான் இந்த கும்பலிடம் சிக்கியுள்ளனர்.

    ஏற்கனவே கடந்த 2015-ம் ஆண்டு சிறுகனூர் அருகே பெண்ணை அழைத்து சென்ற கண்டக்டரை இதே போன்று தகராறு செய்த அப்பகுதி சிமெண்டு ஆலை ஊழியர்கள் 2 பேர் அந்த பெண்ணை அடையும் முயற்சியில் கண்டக்டரை குத்தி கொன்றனர். இப்போது 2-வது சம்பவம் நடந்துள்ளது.

    Next Story
    ×