search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆவடியில் தாய்-3 வயது மகள் கொலை: ஜோதிடர் கைது
    X

    ஆவடியில் தாய்-3 வயது மகள் கொலை: ஜோதிடர் கைது

    தாய் மற்றும் மகள் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் ஆவடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    திருநின்றவூர்:

    ஆவடி நரிக்குறவர் காலனியில் வசித்து வருபவர் அருண்பாண்டியன். ஊசி, பாசி மணி மற்றும் பொம்மை பொருட்களை ஊர் ஊராக சென்று வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி ரோஜா (வயது 22). இவர்களது 3 வயது மகள் சுஜாதா.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு அருண்பாண்டியன் வியாபாரம் சம்பந்தமாக வெளியூர் சென்று விட்டார். வீட்டில் ரோஜாவும், அவரது மகள் சுஜாதாவும் இருந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை அவர்களது வீட்டில் இருந்து யாரும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அருகில் வசிப்பவர்கள் அவர்களது வீட்டுக்கு சென்று பார்த்தனர்.

    அப்போது வீட்டில் உள்ள அறையில் ரோஜாவும், சுஜாதாவும் தலையில் கல்லைப் போட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் ஆவடி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். துணை கமி‌ஷனர் ஈஸ்வரன், இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    கொலையுண்ட 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விசாரணையில் அதே பகுதியில் உறவினர் வீட்டில் தங்கி இருந்த காட்பாடியைச் சேர்ந்த கைரேகை ஜோதிடர் வீரகுமார் (21) என்பவர் ரோஜாவை கற்பழித்து கொலை செய்து இருப்பது தெரிந்தது. மேலும் இதனை பார்த்த ரோஜாவின் 3 வயது மகள் சுஜாதாவின் தலையிலும் கல்லைப் போட்டு கொடூரமாக கொன்று உள்ளார்.

    இதையடுத்து வீரகுமாரை போலீசார் கைது செய்தனர். அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

    நான் நரிக்குறவர் காலனியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்து அடிக்கடி தங்குவேன். அப்போது அருகில் உள்ள வீட்டில் வசிக்கும் ரோஜா மீது ஆசை ஏற்பட்டது.

    நேற்று இரவு உறவினர் வீட்டில் தூங்கியபோது மது போதையில் இருந்தேன். ரோஜாவின் கணவர் வெளியூர் சென்று இருப்பது தெரிந்தது. இதையடுத்து நள்ளிரவு 1.30 மணியளவில் அவளது வீட்டுக்குள் ஏறிக் குதித்து சென்றேன். அங்குள்ள அறையில் ரோஜாவும், அவரது மகள் சுஜாதாவும் தூங்கிக் கொண்டு இருந்தனர். ரோஜாவை நெருங்கியபோது அவர் கூச்சலிட்டு தகராறில் ஈடுபட்டார்.

    உடனே அருகில் கிடந்த கல்லால் அவளது தலையில் தாக்கினேன். இதில் ரோஜா மயங்கினார். பின்னர் அவரை கற்பழித்தேன்.

    இதற்குள் சத்தம் கேட்டு அங்கு தூங்கிக் கொண்டிருந்த ரோஜாவின் மகள் சுஜாதா எழுந்து விட்டாள். இதனால் என்னை அடையாளம் காட்டி விடுவாள் என்று நினைத்து சிறுமி சுஜாதா மீது கல்லை போட்டு கொன்றேன். மேலும் ரோஜா மீது மீண்டும் கல்லைப் போட்டு கொன்று விட்டு தப்பி சென்று விட்டேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    தாய்-மகள் கொலை குறித்து போலீசார் விசாரித்து கொண்டிருந்தபோது கொலையாளி வீரகுமார் அதே பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் எதுவும் நடக்காதது போல் தூங்கிக் கொண்டிருந்தார்.

    ரோஜா மீதான வீரகுமாரின் நடவடிக்கை குறித்து சிலர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் நள்ளிரவில் வீரகுமார் அப்பகுதியில் சுற்றியதை சிலர் பார்த்து இருந்தனர்.

    இதனை வைத்து வீரகுமாரை போலீசார் பிடித்து விசாரித்தனர். முதலில் கொலை செய்ததை மறுத்த அவர் பின்னர் 2 பேரையும் கொன்றதை ஒப்புக் கொண்டார். மேலும் மோப்ப நாய் ஜான்சி வீரகுமாரை கவ்வி பிடித்தது.

    கைதான வீரக்குமார் மீது பீர்க்கண்கரணை போலீஸ் நிலையத்தில் குற்ற வழக்குகள் இருப்பதாக தெரிகிறது. இந்த கொலையில்அவருக்கு வேறு யாரேனும் உதவினார்களா? என்று அவரிடம் விசாரணை நடக்கிறது.

    ரோஜாவின் கணவர் அருண்பாண்டியன் வியாபாரம் சம்பந்தமாக திருத்தணி அருகே உள்ள ஒரு கிராமத்தில் தங்கி இருந்தார். அவருக்கு மனைவி, மகள் கொலை செய்யப்பட்டது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    Next Story
    ×