search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்ற தேர்தலில் வெற்றி வாகை சூடுவோம்: ஓ.பன்னீர்செல்வம்-எடப்பாடி பழனிசாமி அறிக்கை
    X

    பாராளுமன்ற தேர்தலில் வெற்றி வாகை சூடுவோம்: ஓ.பன்னீர்செல்வம்-எடப்பாடி பழனிசாமி அறிக்கை

    எம்.ஜி.ஆர். பிறந்த நாளில் சபதம் ஏற்று வருகிற பாராளுமன்ற தேர்தலில் வெற்றி வாகை சூடுவோம் என்று ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர். #EdappadiPalaniswami #OPanneerselvam

    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    டாக்டர் எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்த நாள் எங்கள் தங்கத்தின் பிறந்த நாள். சிவப்புச் சிங்கத்தின் பிறந்த நாள். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எனும் மாபெரும் மக்கள் பேரியக்கத்தை உருவாக்கிய மக்கள் திலகத்தின் பிறந்த நாள்.

    உலகெங்கும் வாழும் தமிழர்களின் உள்ளங்களில் உவகை தரும் விழாவாக, எல்லோர் இதயங்களிலும், இல்லங்களிலும் எழுச்சி தரும் விழாவாகக் கொண்டாடிக் கொண்டிருக்கும் கழக உடன் பிறப்புகள் அனைவருக்கும் எங்கள் இதயம் நிறைந்த நல்வாழ்த்துகளையும், நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

    அ.தி.மு.க. என்னும் இந்த மாபெரும் பேரியக்கத்திற்கு வரலாற்றுச் சிறப்புகளைச் சேர்த்திடும் வகையில், கருவறையிலிருந்து கல்லறை வரைக்கும் சாதனைத் திட்டங்கள் பலவற்றைப் படைத்தவர் நம் அம்மா.

    அம்மாவின் நம்பிக்கையை, கழக உடன் பிறப்புகளின் பூரண நல்லாசியோடு நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். எதிரிகளின் சூழ்ச்சிகளையும், துரோகிகளின் சதிகளையும் உடைத்தெறிந்து, அம்மாவின் நல்லாட்சியைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறோம். அதேபோல், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எவராலும் அசைக்க முடியாத எஃகுக் கோட்டை என்பதையும் நிரூபித்துக் காட்டியிருக்கிறோம்.

    அம்மா செயல்படுத்தி வந்த நலத் திட்டங்களோடு, புதிய புதிய திட்டங்களையும் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். புரட்சித் தலைவரைப் போல, அம்மாவைப் போல, விசுவாசத் தொண்டர்களாகிய நாமும் தமிழக மக்களுக்காக நம்மை அர்ப்பணித்து பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். அந்த உணர்வோடுதான் இந்தப் பொங்கல் எல்லோருக்கும் இனிய பொங்கலாக அமைய வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 1,000/ ரூபாய் பொங்கல் பரிசாக அம்மாவின் அரசு வழங்கியது.

    புரட்சித் தலைவர் வாரி வாரிக் கொடுத்தவர். அம்மா அள்ளி அள்ளிக் கொடுத்தவர். நாம் கொடுத்து மகிழ்ந்த வள்ளல்களின் வழி வந்தவர்கள். அதனால் தான் நாமும் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். எடுத்துப் பழக்கப்பட்டவர்களுக்கும், கெடுத்துப் பழக்கப்பட்டவர்களுக்கும் அது பேரதிர்ச்சியாக இருக்கிறது. யார் தடை போட்டாலும் அதையெல்லாம் தகர்த் தெறிந்து தமிழக மக்களின் உயர்வுக்காகவும், மகிழ்ச்சிக்காகவும் நாம் பாடுபடுவோம்.

    எதிரிகளும், துரோகிகளும் நமது ஒற்றுமையைப் பார்த்து மிரண்டு போயிருக்கிறார்கள். நமக்கு அவப்பெயர் உண்டாக்க வேண்டும் என்ற தீய எண்ணத் தோடு அவதூறுச் செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள்; உண்மைக்குப் புறம்பாக உளறிக் கொண்டிருக்கிறார்கள்.

    எம்.ஜி.ஆர்., அம்மா ஆகிய நம் இருபெரும் தலைவர்கள் மறைந்தாலும், நம்மை வெல்ல எவராலும் இயலாது என்பதை இந்த உலகிற்கு உணர்த்திக் காட்ட வேண்டும். தமிழ் நாட்டில் தொடர்ந்து கழக ஆட்சிதான் என்பதை உண்மையாக்கிக் காட்ட வேண்டும்.

    தமிழக மக்களுக்காகப் பாடுபடும் ஒரே இயக்கம், புரட்சித் தலைவர் உருவாக்கிய அ.தி.மு.க. மட்டும் தான் என்பதை நிரூபித்துக் காட்ட வேண்டும். நம் கண் முன்னே பாராளுமன்றப் பொதுத் தேர்தல் என்ற களம் தெரிகிறது.

    புரட்சித் தலைவரின் புனிதப் பாதையில், அம்மா வகுத்துத் தந்த வெற்றிப் பாதையில் எந்தத் தேர்தல் எப்பொழுது வந்தாலும், தேர்தல் களத்திலே விசுவாசத் தொண்டர்களாகிய நாம் வெற்றி வாகை சூடுவோம்.

    அதற்காக அனைவரும் அயராது உழைப்போம்; ஒற்றுமையோடு ஓயாது உழைப்போம். வெற்றிக்கனி பறித்து புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரின் விசுவாசத் தொண்டர்கள் என்றுமே வெற்றி வீரர்கள் தான் என்பதை நிரூபித்துக் காட்டுவோம். இதையே புரட்சித் தலைவரின் பிறந்த நாள் சபதமாக எடுப்போம்; நினைத்ததை முடிப்போம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #EdappadiPalaniswami #OPanneerselvam

    Next Story
    ×