search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையில் போராட்டம் நடத்தி கைதான விவசாயிகளுடன் ஜி.கே.வாசன் சந்திப்பு
    X

    சென்னையில் போராட்டம் நடத்தி கைதான விவசாயிகளுடன் ஜி.கே.வாசன் சந்திப்பு

    சென்னையில் போராட்டம் நடத்தி கைதான விவசாயிகளை த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் இன்று நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். #Farmersstruggle

    சென்னை:

    கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர் வழியாக சத்தீஸ்கர் மாநிலத்துக்கு உயர் மின் அழுத்த கோபுரங்கள் வழியாக மின்சாரம் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளனர்.

    இதற்காக 11 உயர் மின் அழுத்த கோபுரங்கள் விவசாய நிலங்களில் நடப்பட உள்ளது.

    இந்த கோபுரங்கள் அமைக்கப்பட்டால் விவசாயம், கோழிப்பண்ணை, மாட்டுப்பண்ணை ஆகிய தொழில்கள் பாதிக்கப்படும் என்று விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    மற்ற மாநிலங்களைப் போல் பூமிக்கடியில் புதைவடங்கள் மூலம் கொண்டு செல்லும்படி வலியுறுத்தி வருகிறார்கள். இதற்காக கடந்த 15 நாட்களாக பலகட்ட போராட்டங்களையும் நடத்தினார்கள்.

    போராட்டத்துக்கு தீர்வு கிடைக்காததால் சென்னைக்கு திரண்டு வந்து நேற்று சேப்பாக்கத்தில் இருந்து கோட்டை நோக்கி பேரணி நடத்தினார்கள். இந்தபோராட்டத்துக்கு கொங்கு ராஜாமணி, திருப்பூர் செந்தில், வக்கீல் ஈசன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.

    போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக விவசாய பிரதிநிதிகளுடன் மின்துறை அமைச்சர் தங்கமணி பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் இந்த பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது.

    இதையடுத்து அனைவரும் மீண்டும் நேற்று இரவு சேப்பாக்கத்தில் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினார்கள். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 460 விவசாயிகளை போலீசார் கைதுசெய்தனர். அவர்கள் அனைவரும் சிந்தாதிரிபேட்டையில் உள்ள இரண்டு மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    மண்டபங்களில் இருக்கும் விவசாயிகளை த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் இன்று நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அவருடன் கோவை தங்கம் உள்ளிட்ட நிர்வாகிகளும் சென்றனர்.

    விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த ஜி.கே.வாசன் உடனடியாக அவர்களை விடுதலை செய்ய வேண்டும். அவர்களது நியாயமான கோரிக்கைக்கு அரசுசெவி சாய்க்க வேண்டும் என்றார். #Farmersstruggle

    Next Story
    ×