search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சமூக நலத்துறை அதிகாரிகளிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்திய காட்சி.
    X
    சமூக நலத்துறை அதிகாரிகளிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்திய காட்சி.

    தாலிக்கு தங்கம் வழங்க லஞ்சம் - வேலூர் மாவட்ட சமூக நலத்துறை ஊழியர்களிடம் விசாரணை

    வேலூர் மாவட்டத்தில் தாலிக்கு தங்கம் வழங்க சமூக நலத்துறை ஊழியர்கள் மூலம் பொதுமக்களிடம் லஞ்சம் வசூல் செய்தது தெரியவந்துள்ளது. #Thalikkuthangam
    வேலூர்:

    வேலூர் மாவட்ட சமூக நலத்துறை சார்பில் திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் 3 ஆயிரம் பேருக்கு தாலிக்கு தங்கம், உதவித்தொகை வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    முதற்கட்டமாக கடந்த 22-ந் தேதி 707 பெண்களுக்கு தாலிக்கு 8 கிராம் தங்கம், திருமண நிதியுதவி ஆகியவற்றை அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர் கபில் ஆகியோர் வழங்கினர். அதைத்தொடர்ந்து மாவட்டம் முழுவதும் பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம், நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தில் 690 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம், திருமண நிதியுதவி வழங்கப்பட்டது.

    பயனாளிகளிடம் சமூக நலத்துறை அலுவலர் சாந்தி மற்றும் அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாக மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் வேலூர் மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சரவணக்குமார், இன்ஸ்பெக்டர்கள் விஜய், எஸ்.விஜயலட்சுமி மற்றும் போலீசார் நேற்று மாலை 6 மணியளவில் சமூக நலத்துறை அலுவலகத்திற்கு சென்றனர்.

    முதற்கட்டமாக அங்கிருந்த பொதுமக்களை வெளியேற்றினர். பின்னர் வெளியாட்கள் உள்ளேயும், அலுவலக ஊழியர்கள் வெளியேயும் செல்லாதபடி அலுவலகத்துக்கு பூட்டு போட்டனர். தொடர்ந்து சமூக நலத்துறை அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர்.

    இச்சோதனையில் பீரோவின் அடியில், சாமி படத்தின் பின்புறம், கழிவறை, மேசையின் அடியில் என பல பகுதிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கணக்கில் வராத ரூ.76,500 லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கியது.

    இதுதொடர்பாக மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் சாந்தி, கணக்காளர் உள்பட 3 பேரிடம் தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணை சுமார் 4 மணி நேரம் நீடித்தது.



    நேற்று தாலிக்கு தங்கம் பெற்ற 690 பேரிடமும் இருந்து ரூ.500 முதல் ரூ.1,500 வரை சமூகநலத்துறை அதிகாரிகள் லஞ்சமாக பெற்று தாலிக்கு தங்கம், நிதியுதவி வழங்கியுள்ளனர். மாவட்டம் முழுவதும் உள்ள சமூக நலத்துறை ஊழியர்கள் மூலம் இந்த பணம் வசூலிக்கப்பட்டுள்ளது.

    பண வசூல் செய்த சமூக நலத்துறை ஊழியர்கள் குறித்து விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.  #Thalikkuthangam

    Next Story
    ×