search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரூ.2,300 கோடி செலவில் மாணவர்களுக்கு இலவச லேப்-டாப்: தமிழக அரசு வழங்குகிறது
    X

    ரூ.2,300 கோடி செலவில் மாணவர்களுக்கு இலவச லேப்-டாப்: தமிழக அரசு வழங்குகிறது

    தமிழக அரசு ரூ.2,300 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பள்ளி மாணவர்களுக்கு வழங்க 15 லட்சத்து 66 ஆயிரம் லேப்-டாப்களை கொள்முதல் செய்துள்ளது. #FreeLaptops
    சென்னை:

    தமிழக சட்டசபைக்கு கடந்த 2011-ம் ஆண்டு நடந்த தேர்தலின்போது அ.தி.மு.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், “மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு இலவச லேப்-டாப் வழங்கப்படும்” என்று அறிவித்தது.

    அதன்படி அந்த தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்ததும் அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா இலவச லேப்- டாப் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    இந்த திட்டத்தின்கீழ் 2011-2012-ம் ஆண்டு 8.99 லட்சம் இலவச லேப்-டாப்கள் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்டன. 2012- 2013-ம் ஆண்டு 7.56 லட்சம் லேப்-டாப்கள், 2013-2014-ம் ஆண்டு 5.65 லட்சம் லேப்- டாப்கள், 2014-2015-ம் ஆண்டு 4.97 லட்சம் லேப்- டாப்கள், 2015-2016-ம் ஆண்டு 5.19 லேப்-டாப்கள் வழங்கப்பட்டன.

    2016-2017-ம் ஆண்டு இந்த எண்ணிக்கை 5.58 லட்சம் லேப்-டாப்களாக அதிகரித்தது. ஜெயலலிதா மரணம் அடைந்த பிறகு 2017-2018-ம் ஆண்டு 42 ஆயிரத்து 473 லேப்- டாப்கள்தான் வழங்கப்பட்டன. கடந்த 7 ஆண்டுகளில் 38 லட்சத்துக்கும் மேற்பட்ட லேப்-டாப்கள் மாணவ- மாணவிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு உள்ளன.

    2017-2018-ம் ஆண்டு 4.73 லட்சம் லேப்-டாப்கள் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் 2018-2019-ம் ஆண்டுக்கான லேப்-டாப்களும் வழங்கப்பட வேண்டியது உள்ளது. பல்வேறு காரணங்களால் இலவச லேப்-டாப்கள் வழங்குவது தாமதம் ஆனது.

    தமிழக அரசு இந்த திட்டத்திற்காக சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் 5.5 லட்சம் லேப்-டாப்களை தனியார் நிறுவனங்களிடம் இருந்து விலை கொடுத்து வாங்குகிறது. தமிழக அரசின் எல்காட் நிறுவனம் சார்பில் இதற்காக டெண்டர் விடப்பட்டு லேப்-டாப்கள் பெறப்படுகின்றன. எந்த நிறுவனம் மிகக்குறைந்த விலைக்கு தயாரித்து தருவதாக சொல்கிறதோ அந்த நிறுவனத்திடம் லேப்- டாப்கள் பெறப்படுகின்றன.

    கடந்த ஆண்டு 4.73 லட்சம் லேப்-டாப்கள் வழங்கப்பட வேண்டியது நிலுவையில் உள்ள நிலையில் அடுத்த கல்வி ஆண்டுக்கான லேப்- டாப்களையும் மாணவர்களுக்கு தமிழக அரசு கொடுக்க வேண்டியது உள்ளது. இதை கருத்தில் கொண்டு அதிக அளவில் லேப்-டாப்களை கொள்முதல் செய்ய தமிழக அரசு கொள்கை முடிவு செய்துள்ளது.

    அதன் அடிப்படையில் எல்காட் நிறுவனம் டெண்டர் வெளியிடப்பட்டது. அதில் பல்வேறு நிறுவனங்கள் கலந்து கொண்டன. அதிலிருந்து லெனோவா நிறுவனம் லேப்-டாப்களை தயாரிப்பதற்கான டெண்டரை பெற்று உள்ளது.

    இந்த நிறுவனத்திற்கு தமிழக அரசு ரூ.2,300 கோடி ஒதுக்கீடு செய்து இருக்கிறது. இந்த நிதி மூலம் 15 லட்சத்து 66 ஆயிரம் லேப்-டாப்கள் கொள்முதல் செய்யப்படும்.

    ஒவ்வொரு லேப்-டாப்பும் ரூ.10 ஆயிரம் மதிப்பில் வழங்குவதற்கு லெனோவா நிறுவனம் ஒத்துக்கொண்டு இருப்பதாக தமிழக அரசின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஒவ்வொரு லேப்-டாப்பும் சராசரியாக சில நூறு ரூபாய் குறைவாகவே வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக அவர் தெரிவித்தார்.

    இலவச லேப்-டாப்க்கான விலை விவரங்கள் மற்றும் அவை மாணவர்களுக்கு விநியோக்கப்படும் விவரங்களை முதல்- அமைச்சர் வெளியிடுவார் என்று அந்த அதிகாரி தெரிவித்தார். இதனால் நடப்பு கல்வி ஆண்டில் உள்ள மாணவர்களும் அடுத்த ஆண்டுக்கான மாணவர்களும் இலவச லேப்-டாப்புகளை விரைவில் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    லெனோவா நிறுவனம் இலவச லேப்-டாப்களை விரைவில் சப்ளை செய்யும் என்று தெரிய வந்துள்ளது. எனவே வருகிற ஜூன் மாதம் பள்ளிகள் திறப்பதற்கு முன்பே இலவச லேப்-டாப்கள் மாணவ- மாணவிகளுக்கு கிடைத்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இலவச லேப்-டாப் திட்டத்துக்காக தமிழக அரசு மிக அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்து அதிகபட்சமான லேப்- டாப்களை கொள்முதல் செய்வது இதுவே முதல் தடவையாகும். #FreeLaptops
    Next Story
    ×