search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவையில் தங்கி படித்த ஐ.ஏ.எஸ். பயிற்சி மாணவர் தூக்குபோட்டு தற்கொலை
    X

    கோவையில் தங்கி படித்த ஐ.ஏ.எஸ். பயிற்சி மாணவர் தூக்குபோட்டு தற்கொலை

    கோவையில் ஐ.ஏ.எஸ். பயிற்சி மாணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். காதல் பிரச்சினை காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை:

    திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா ஜம்புநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரதீப்(வயது 21). பட்டதாரி.

    இவரும், நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்த இவரது உறவினரான சங்கர் (25) என்பவரும் கோவையில் தனியார் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையங்களில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சேர்ந்தனர்.

    ஆர்.எஸ்.புரம் வெங்கட கிருஷ்ணா சாலையில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கி பயிற்சி வகுப்புகளுக்கு சென்று வந்தனர். பிரதீப் காந்திபுரத்தில் உள்ள பயிற்சி மையத்திலும், சங்கர் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மையத்திலும் படித்தனர்.

    நேற்று சங்கர் பயிற்சி வகுப்புக்கு சென்று விட்டு இரவு அறைக்கு திரும்பினார். அப்போது அறைக்கதவு உள் பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. வெகுநேரமாக தட்டியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அவர் கதவை உடைத்து உள்ளே சென்றார்.

    அங்கு பிரதீப் மின்விசிறியில் லுங்கியால் தூக்குபோட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக தொங்கினார். அதிர்ச்சியடைந்த சங்கர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஜோதி, சப்-இன்ஸ்பெக்டர் செல்லமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    அறையில் இருந்த பிரதீப்பின் செல்போனை போலீசார் கைப்பற்றினர். அதில் அனைத்து நம்பர்களும், மெசேஜ்களும் அழிக்கப்பட்டு இருந்தது. பிரதீப் அடிக்கடி வெளியே சென்று யாருடனோ நீண்ட நேரம் செல்போனில் பேசி வந்துள்ளார். எனவே காதல் பிரச்சினையில் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

    பிரதீப் கடைசியாக யார்- யாரிடம் செல்போனில் பேசினார்? என்பதை கண்டறிய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த தகவல் கிடைத்ததும், மேல் விசாரணை நடத்தும் போது பிரதீப் தற்கொலைக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

    Next Story
    ×