search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆலங்குளம் அருகே கடையில் நூதன முறையில் ரூ. 8 லட்சம் கொள்ளை
    X

    ஆலங்குளம் அருகே கடையில் நூதன முறையில் ரூ. 8 லட்சம் கொள்ளை

    ஆலங்குளம் அருகே கடையில் நூதன முறையில் ரூ. 8 லட்சம் கொள்ளையடித்த கடை ஊழியர்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆலங்குளம்:

    நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தை அடுத்த ஊத்துமலை அருகே உள்ள ரெட்டியார்பட்டியை சேர்ந்தவர் விஜய். இவர் ரெட்டியார்பட்டியில் சூப்பர் மார்க்கெட் வைத்து நடத்தி வருகிறார். இங்கு அதே பகுதியை சேர்ந்த உதயகுமார், முருகன் ஆகியோர் தொழிலாளியாக வேலை பார்த்து வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் 5-ந்தேதி விஜய் வழக்கம்போல் கடையை திறக்க சென்றார். அப்போது கடையில் தீபாவளி விற்பனை பணம் ரூ. 8 லட்சம் மாயமாகி இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இதுகுறித்து அவர் ஊத்துமலை போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் தனலெட்சுமி வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தார். இந்நிலையில் ரெட்டியார் பட்டியை சேர்ந்த லெட்சுமணன் என்ற தினேஷ் என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    இதையடுத்து அவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. கடையில் வேலை பார்த்த உதயகுமார், முருகன் ஆகியோரின் நண்பர் லெட்சுமணன் என்ற தினேஷ். கடந்த 4-ந்தேதி தனது நண்பர் தினேசை உதயகுமார், முருகன் ஆகியோர் வரவைத்துள்ளனர்.

    அப்போது தீபாவளி விற்பனை நடந்ததால் விஜய் அவர்களை கண்காணிக்க முடியவில்லை. இதைத்தொடர்ந்து தினேசை கடைக்குள்ளேயே ஒரு மறைவான இடத்தில் தங்க வைத்தனர். இதை அறியாத விஜய் இரவு கடையை பூட்டி விட்டு சென்றார். இரவில் கடையில் தங்கியிருந்த தினேஷ் அங்கு விற்பனையான பணம் ரூ.8 லட்சம் மற்றும் சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளையும் கொள்ளையடித்தார். பின்பு விடியும் வரை அங்கேயே காத்திருந்தார்.

    மறுநாள் காலை விஜய் கடையை திறக்க வந்தார். அப்போது தொழிலாளர்கள் உதயகுமார் மற்றும் முருகன் கடைக்கு வேலைக்கு வந்துள்ளனர். காலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி உதயகுமாரும், முருகனும், தினேசை கொள்ளையடித்த பணத்துடன் தப்பவிட்டனர்.

    கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் நண்பர்கள் 3 பேரும் சேர்ந்து கார், பைக் வாங்கி ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.6 லட்சத்தை மீட்டனர்.

    Next Story
    ×