search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பள்ளத்தில் கவிழ்ந்த பஸ்சின் முன்பகுதி சேதமடைந்துள்ளது.
    X
    பள்ளத்தில் கவிழ்ந்த பஸ்சின் முன்பகுதி சேதமடைந்துள்ளது.

    மயிலம் அருகே பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து 2 அய்யப்ப பக்தர்கள் பலி

    விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே இன்று அதிகாலை பஸ் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 2 அய்யப்ப பக்தர்கள் பலியானார்கள். #VillupuramAccident
    மயிலம்:

    ஆந்திர மாநிலம் சத்தியவாடி பகுதியில் இருந்து அய்யப்ப பக்தர்கள் 39 பேர் கடந்த 8-ந்தேதி ஒரு பஸ்சில் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு புறப்பட்டனர்.

    அவர்கள் சபரிமலையில் தரிசனம் செய்து விட்டு பின்னர் சொந்த ஊருக்கு அதே பஸ்சில் புறப்பட்டனர். அந்த பஸ் இன்று அதிகாலை விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே உள்ள ஜக்காம்பேட்டை பகுதியில் வந்து கொண்டிருந்தது.

    அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பஸ்சில் பயணம் செய்த ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த தசரதய்யா (வயது 66) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    அவரது தம்பி ராமகிருஷ்ணன் (62) மற்றும் பஸ்சில் இருந்த 39 பேர் இடிபாட்டுக்குள் சிக்கி பலத்த காயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மயிலம் இன்ஸ்பெக்டர் பால்சுதர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    விபத்தில் சிக்கி பலியான அய்யப்ப பக்தர் தசரதய்யாவின் உடலை படத்தில் காணலாம்.

    பின்னர் அவர்கள் பஸ்சின் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்கு போராடி கொண்டிருந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வழியிலேயே ராமகிருஷ்ணன் இறந்து விட்டார்.

    மற்ற 38 பேருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அவர்களில் சிலர் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சென்றனர்.

    இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×