search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாண்டியன்
    X
    பாண்டியன்

    கஜா புயலால் சேதம்- வீட்டை சீரமைக்க முடியாத வேதனையில் தொழிலாளி தற்கொலை

    ஒரத்தநாடு அருகே கஜா புயலால் சேதமடைந்த வீட்டை சீரமைக்க முடியாத மனவேதனையில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    ஒரத்தநாடு:

    தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள திருமங்கலக்கோட்டை கிழக்கு முக்கரை கிராமத்தை சேர்ந்தவர் ராமையன். இவரது மகன் பாண்டியன் (வயது39). கூலித்தொழிலாளி. திருமணமாகாதவர்.

    இவர் தனது தந்தை ராமையனுடன் கூரை வீட்டில் வசித்து வந்தார். கடந்த மாதம் 16-ந்தேதி தாக்கிய கஜா புயலில் இவருடைய கூரை வீடு சேதமடைந்தது.

    புயலால் சேதமான வீட்டை சீரமைக்க பணம் இல்லாமல் பாண்டியன் மிகவும் வேதனைப்பட்டு வந்தார். மேலும் வேலையும் இல்லாமல் இருந்து வந்ததால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த நிலையில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் வீட்டில் இருந்த பாண்டியன் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென மாயமானார். இதனால் அவரை உறவினர்கள் பல இடங்களில் தேடி வந்தனர்.

    நேற்று அதே பகுதியில் ஒரு விவசாயிக்கு சொந்தமான ஆழ்துளை கிணற்றின் குறுக்கே இருந்த கம்பத்தில் பாண்டியன் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கினார்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் பாப்பாநாடு போலீசார் அங்கு சென்று பாண்டியனின் உடலை கைப்பற்றி ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×